வேலை வேணுமா? நான் வாங்கி தரேன் வா.. சிறுமியை சீரழித்த டாக்ஸி டிரைவர்கள்! மும்பையில் கொடூரம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிறுவர்களுக்கான பாதுகாப்பகத்தில் தங்கியிருந்த சிறுமி அங்கிருந்து வெளியேற முயன்ற நிலையில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

விசாரணை
16 வயது ஆவதற்கு இன்றும் ஒரு மாதம் இருந்த நிலையில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறை கூறியுள்ளதாவது, "மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த ஜூலை மாதம் இந்த காப்பகத்திற்கு வந்தார். முன்னதாக அவர் தனது குடும்பத்தினரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தப்பிக்க முயற்சி
விசாரணை முடியும் வரை காப்பகத்தில் சிறுமி தங்கவைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுமிக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். ஆனால் கடந்த 21ம் தேதி அவர் திடீரென காப்பகத்தைவிட்டு வெளியேறிவிட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அடுத்த நாள் அவர் காப்பகத்திற்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். அதாவது அவர் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் 8வது நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்திருக்கிறார்.

கூட்டு பாலியல் பலாத்காரம்
அப்போது அங்கு வந்த 2 டாக்ஸி ஓட்டுநர்கள் சிறுமியிடம் பேச்சுக்கொடுத்துள்ளனர். பின்னர் சிறுமிக்கு வேலை வாங்கிக் கொடுப்பதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய சிறுமி, ஓட்டுநர்களுடன் சென்றுள்ளார். அவரை லாஜ்ட்க்கு அழைத்து சென்ற இருவரும் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து அடுத்த நாள் அதே ரயில் நிலையத்தில் அவரை இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் சிறுமி காப்பகம் திரும்பியுள்ளார்.

கைது
அங்கு தனக்கு நேர்ந்ததை விவரித்துள்ளார். இதனையடுத்து புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் சிசிடிவி கேமரா மூலம் ஒருவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் தலைமறைவாகியுள்ளார். அவரை தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் அவரும் கைது செய்யப்படுவார். கைது செய்யப்பட்டுள்ள 28 வயது இளைஞர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பவார் கூறியுள்ளார்.

குற்றங்கள்
நாடு முழுவதும் கடந்த 6 ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2016ம் ஆண்டு இந்த குற்றங்கள் 338,954 ஆக பதிவாகியிருந்தன. ஆனால் 2021ல் இக்குற்றங்களின் எண்ணிக்கை 26.35 சதவிகிதம் அதிகரித்து 428,278 ஆக பதிவாகியுள்ளன. பெண்களை போக பொருளாக சித்தரிக்கும் சினிமாக்கள், விளம்பரங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றை புறக்கணிப்பதன் மூலம்தான் இக்குற்றங்களை தடுக்க முடியும் என்று மகளிர் அமைப்புகளும் உளவியல் நிபுணர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications