தடுமாறும் இந்திய பங்குச்சந்தைகள்? டிரம்ப் வருகையால் அடுத்து என்னவாகும்!
மும்பை: அமெரிக்க அதிபராக டிரம்ப் நாளை பதவியேற்கும் நிலையில், சர்வதேச பங்குச்சந்தைகள் புதிய அமெரிக்க அதிபரின் செயல்பாடுகளை உற்றுக் கவனித்து வருகிறது. அமெரிக்க அதிபரின் முடிவுகளால் இந்திய பங்குச்சந்தைகள் என்னவாகும்.. இதனால் எந்த துறைகளில் பாதிப்புகள் அதிகம் இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பங்குச்சந்தைகள் என்பது எப்போதும் நிச்சயமற்றதாகவே இருக்கும். எதிர்பாராத நேரங்களில் மார்க்கெட் உயரும்.. எல்லாரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது மார்க்கெட் கவிழும். இப்படி எதிர்பார்க்காத பல விஷயங்கள் நிரம்பியது தான் பங்குச்சந்தை. டிரம்பும் கிட்டதட்ட அதுபோல ஒரு கணிக்க முடியாத தலைவர்தான்.

பங்குச்சந்தைகள்:
கடந்த நவம்பர் மாதம் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றதாகத் தகவல் வெளியான போது, பங்குச்சந்தை அசுர வேகத்தில் பாய்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. முதலீட்டாளர்கள் பயங்கர மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், இப்போது டிரம்ப் அதிபராக பதவியேற்கும் சூழலில், இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. டிரம்பின் வருகை இந்தியப் பங்குச்சந்தைகளில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் பார்க்கலாம்.
டிரம்ப்:
டிரம்ப் குடியரசு கட்சி எப்போதும் தொழிலதிபர்களின் நலனிற்கே முக்கியத்துவம் தரும். எனவே அவரது ஆட்சியில் தொழிலதிபர்களுக்குச் சாதகமான பாலிசிக்கள் வரும் என்ற நம்பிக்கையில் பங்குச்சந்தை உச்சம் தொட்டது. ஆனால், அதன் பிறகு அவரது பேச்சுகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைச் சிதைப்பதாக அமைந்தது. இறக்குமதி வரி தொடர்பான அவரது பேச்சுகள் சர்வதேச பொருளாதாரத்தைப் பாதிக்கிறது.
மேலும், கிரீன்லாந்தை வாங்கப் போவதாக அவர் சொல்லியிருப்பது புவிசார் அரசியல் பதட்டங்களையும் அதிகரிப்பதாக இருக்கிறது. இவை எல்லாம் சேர்ந்தே பங்குச்சந்தையை இப்போது சரிவின் பாதையில் தள்ளியுள்ளது.
வல்லுநர்கள் சொல்வது என்ன:
இது தொடர்பாக ரெலிகேர் ப்ரோக்கிங் லிமிடெட் ஆராய்ச்சியின் மூத்த துணைத் தலைவர் அஜித் மிஸ்ரா பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடேவிடம் கூறுகையில், "டிரம்ப் மீண்டும் அதிபராகப் பதவியேற்பது சந்தையில் கலவையான ரியாக்ஷனை ஏற்படுத்தியுள்ளது. அவர் அமெரிக்காவுக்கே முக்கியத்துவம் தருவார் என்பதால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்படலாம். அதேநேரம் இந்தியா உடன் அவர் நெருக்கம் காட்டுவார் என்பதால் இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பம், மருந்துகள் மற்றும் பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் இதன் மூலம் பலன் பெறும்.
ஹெச் 1 பி விசா விவகாரத்தில் அவர் என்ன மாதிரியான கொள்கைகளை எடுக்கப் போகிறார் என்பதை இந்திய ஐடி நிறுவனங்கள் கவனித்து வருகின்றன. மேலும், அவரது பாலிசிக்களால் கச்சா எண்ணெய் விலை பெரியளவில் உயராது. அதேநேரம் டிரம்பின் கணிக்க முடியாத செயல்பாடுகள் சர்வதேச சந்தையில் தற்காலிக ஏற்ற இறக்கத்தை அடிக்கடி ஏற்படுத்தலாம். டாலர் வலுவடைந்து வரும் சூழலில் ரூபாய் உட்பட மற்ற நாணயங்களின் மதிப்பு சரிகிறது. இப்படி பல விதங்களில் டிரம்பின் கொள்கைகள் இந்தியப் பங்குச்சந்தையை நிர்ணயிக்கும்" என்றார்.
டாலர்- ரூபாய்:
அமெரிக்காவுக்குச் சாதகமான முடிவுகளைத் தான் டிரம்ப் முதலில் எடுப்பார். இதுபோன்ற காரணங்களால் டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டாலர் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன் காரணமாகச் சர்வதேச முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்தியச் சந்தையை விட்டு வெளியேறி வருகிறார்கள். இது தொடர்ந்தால் இந்தியப் பங்குச்சந்தை மேலும் பெரியளவில் சரிய வாய்ப்பு இருக்கிறது.
என்னவாக வாய்ப்பு இருக்கு:
இது தொடர்பாகப் பங்குச்சந்தை வல்லுநர் சதீஷ் சந்திர அலுரி கூறுகையில், "இந்தியப் பங்குச்சந்தை கடும் அழுத்தத்தில் உள்ளது. புத்தாண்டுக்குப் பிறகு மட்டும் சுமார் ரூ.27,889 கோடி மதிப்பிலான பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர். கடந்த அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான பங்குகளை விற்றுள்ளனர். இந்திய இறக்குமதிகள் வரி விதிப்பது, ஹெச் 1 பி விசா மீதான கட்டுப்பாடு என எதாவது ஒரு நடவடிக்கையை டிரம்ப் எடுத்தாலும் அது நிலைமையை மோசமாக்கும்" என்றார்
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications