கர்நாடகாவின் பெலகாவி, எல்லை பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்கனும்-உத்தவ் தாக்கரே பேச்சால் டென்ஷன்!
மும்பை: கர்நாடகாவில் பெலகாவி உள்ளிட்ட சர்ச்சைக்குரிய எல்லை பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா சட்டசபையில் சிவசேனா தலைவரும் முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே பேசியிருக்கிறார். உத்தவ் தாக்கரேவின் இந்த பேச்சு கர்நாடகா எல்லையில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் பெலகாவி, பீதர், கார்வார் உள்ளிட்டவை மகாராஷ்டிரா மாநில எல்லையில் உள்ளன. இப்பகுதியில் மராத்தி மொழி பேசுகிற மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதிகளை கர்நாடகாவில் இருந்து பிரித்து மகாராஷ்டிரா மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இதனால் மகாராஷ்டிரா- கர்நாடகா இடையே பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி உள்ளது. இருப்பினும் எல்லை பிரச்சனையில் இரு மாநில அரசுகளும் கடும் போக்கை வெளிப்படுத்தி வருகின்றன. மகாராஷ்டிரா அமைச்சர்கள் கர்நாடகாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. ஆனால் சீனாவைப் போல அத்துமீறி கர்நாடகாவுக்குள் நுழைவோம் என்றார் சிவசேனாவின் சஞ்சய் ராவத். இதற்கு எதிர்வினையாக எல்லையில் மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர் கன்னடர்கள். கன்னடர்களின் இந்த கோபத்துக்கு மராட்டியர்களும் பதிலடி தருவோம் என எச்சரித்தனர். கர்நாடகா அரசுப் பேருந்துகளுக்கு கறுப்பு பெயிண்ட் அடித்து ஜெய் மகாராஷ்டிரா என எழுதி அனுப்பினர் மராட்டியர்கள்.
கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லையில் மொத்தம் 814 கிராமங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம். இந்த 814 கிராமங்களை முன்வைத்துதான் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சர்ச்சை நிலவுகிறது. இதன் ஒருபகுதியாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கிராமங்களை இரு மாநிலங்களுக்கும் பிரித்து தாரை வார்க்கலாம் என்கிற யோசனையும் கூட முன்வைக்கப்பட்டது. கர்நாடகா, மகாராஷ்டிரா சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் இந்த எல்லை பிரச்சனை பிரதான இடம்பிடித்துக் கொண்டும் இருக்கிறது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. கர்நாடகா கிராமங்களை தங்களது மாநிலத்துடன் இணைக்கக் கோரி மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை கர்நாடகா அரசு கடுமையாக எதிர்த்து கொண்டிருக்கிறது. இப்போது இந்த விவகாரத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியிருப்பது மீண்டும் பிரச்சனையை பூதாகரமாக்கிவிட்டிருக்கிறது.
மகாராஷ்டிரா சட்டசபையில் பேசிய உத்தவ் தாக்கரே, எல்லை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது; இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் முடிவெடுக்கின்ற வரை மற்றொரு நிலைப்பாடு எடுக்க வேண்டும்; அதாவது பெலகாவி உள்ளிட்ட கர்நாடகாவின் சர்ச்சைக்குரிய பகுதிகளை மத்திய அரசு, யூனியன் பிரதேசமாக பிரகடனம் செய்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். உத்தவ் தாக்கரேவின் இந்த பேச்சு கர்நாடகாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே ஆளும் பாஜகவுக்கு நெருக்கடியாக லிங்காயத் ஜாதியினர் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்; சுரங்க மாஃபியா ஜனார்த்தன ரெட்டி புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி இருக்கிறார். இப்போது எல்லை விவகாரமும் பாஜகவுக்கு இடியாப்பக் சிக்கலாக நிற்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications