"இந்தி திணிப்பு.." நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தாக்கரே சகோதரர்கள்! ஸ்டாலின் கொடுத்த சப்போர்ட்! என்ன பாருங்க
மும்பை: மகாராஷ்டிராவில் சமீபத்தில் பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே இணைந்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர். இது அரசியல் ரீதியாக ரொம்பவே முக்கியமான போராட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் தாக்கரே போராட்டத்திற்குத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் இப்போது பட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்குச் சமீபத்தில் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்பது போன்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், அதற்கு அங்குள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போராட்டம்
இதைக் கண்டித்து நேற்று சனிக்கிழமை போராட்டங்களும் அறிவிக்கப்பட்டன. இருப்பினும், அதற்குள் மகாராஷ்டிரா அரசு தனது இந்தி கட்டாயம் என்ற முடிவில் இருந்து பின்வாங்கிவிட்டது. இதையடுத்து இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் 'மராத்தியின் குரல்' என்ற பெயரில் வெற்றி பேரணியாக நடத்தப்பட்டது. நேற்று மகாராஷ்டிராவில் மிகப் பெரியளவில் இந்தப் பேரணி நடந்தது. இதில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே இணைந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஸ்டாலின் வரவேற்பு
2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு தலைவர்களும் அரசியல் நிகழ்ச்சியில் பொதுவெளியில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். தங்களுக்குள் இருந்த "இடைவெளி" நீங்கிவிட்டதாக அறிவித்தனர். இது அங்கு மிக முக்கியமான ஒரு அரசியல் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்தித் திணிப்பிற்கு எதிராக மற்றும் ராஜ் தாக்கரே ஒன்று சேர்ந்திருப்பதைத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள்.
இந்தித் திணிப்புக்கு எதிராகச் சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது" என்று பதிவிட்டுள்ளார். மேலும், இந்தித் திணிப்பால் பல மொழிகள் அழிந்துள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
ஏன் முக்கியம்
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைந்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அங்குச் சிவசேனா கட்சி தாக்கரே குடும்பத்தினர் வசமே இருந்தது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகக் கலகம் செய்த ஷிண்டே சிவசேனா கட்சியைத் தொடங்கினார். பல எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். தேர்தல் ஆணையமும் ஷிண்டே தரப்பை அங்கீகரித்தது. கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலிலும் 57 இடங்களில் வென்று இரண்டாவது மிகப் பெரிய கட்சியை உருவெடுத்தது.
உத்தவ் தாக்கரே
இது அங்கு உத்தவ் தாக்கரேவுக்கு மிகப் பெரிய அரசியல் அழுத்தத்தைக் கொடுத்தது. தாக்கரேவால் சிவசேனா கட்சியை மீண்டும் கொண்டு வர முடியவில்லை. இந்தச் சூழலில் தான் மீண்டும் இந்தித் திணிப்பிற்கு எதிராக தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைந்துள்ளனர். உத்தவ் தாக்கரேவின் தந்தையும் சிவசேனா கட்சியைத் தொடங்கியவருமான பால் தாக்கரேவின் இளைய சகோதரரின் மகன் தான் ராஜ் தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.
20 ஆண்டுகளில் முதல்முறை
ராஜ் தாக்கரே முதலில் சிவசேனா கட்சியிலேயே இருந்தார். இருப்பினும், 2000களில் உத்தவ் தாக்கரேவுக்காக தான் ஓரங்கட்டப்படுவதாக ராஜ் தாக்கரே உணர்ந்தார். இதையடுத்து அவர் 2005ல் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா.என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதன் பிறகு தாக்கரே சகோதரர்கள் ஒன்றாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்றதே இல்லை. இந்தச் சூழலில் தான் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரு தலைவர்களும் ஒரே மேடையில் இந்தி திணிப்பிற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications