12 சிவசேனா எம்பிக்கள் ஷிண்டே கோஷ்டிக்கு தாவல்? லோக்சபா கொறடா திடீர் மாற்றம்- கலங்கும் உத்தவ் தாக்கரே
மும்பை: சிவசேனாவின் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் தாவிவிட்டனர். இந்த நிலையில் சிவசேனா கட்சியின் எம்.பிக்களும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்து முகாம் மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து லோக்சபா சிவசேனா கொறடா பதவியில் இருந்து பாவனா காவ்லி நீக்கப்பட்டு புதிய கொறடாவாக, ராஜன் விஜாரே நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.எல்.ஏக்கள் பெரும்பான்மையோர் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவை எதிர்த்தனர். இதனால் முதல்வர் பதவியை பறிகொடுத்தார் உத்தவ் தாக்கரே. சிவசேனா எம்.எல்.ஏக்கள், ஏக்நாத் ஷிண்டேவையே ஆதரித்தனர். அதனால் ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்வரானார்.

இதனையடுத்து சிவசேனா கட்சி, சின்னம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சிவசேனா கட்சியின் எம்.பி.க்களும் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை எதிர்த்து வருகின்றனர். சிவசேனாவின் 12 எம்.பி.க்கள், ஏக்நாத் ஷிண்டே முகாமுக்கு வர உள்ளதாக அந்த கோஷ்டி தகவல் பரப்பி வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் சிவசேனா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை ஏக்நாத் ஷிண்டே மகன், பாவனா காவ்லி ஆகியோர் புறக்கணித்தனர். அத்துடன் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும்; ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் எனவும் சிவசேனா எம்.பி.க்கள் கடிதம் அனுப்பினர்.
இதனால் எம்.பி.க்கள் தங்களது கட்டுப்பாட்டை நழுவி செல்வதாக அதிர்ச்சி அடைந்தது சிவசேனா தலைமை. இதனையடுத்தே லோக்சபா கொறடா பாவனா காவ்லி நீக்கப்பட்டு அவருக்குப் பதிப் ராஜன் விஜாரே நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால் மகாராஷ்டிராவில் மட்டுமல்ல டெல்லியிலும் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications