சிவசேனா: சபாநாயகர் தீர்ப்பு பச்சை ஜனநாயகப் படுகொலை.. உச்சநீதிமன்றம் போவதாக உத்தவ் தாக்கரே ஆவேசம்!
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா என மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் ராகுல் நார்வேகர் அளித்த தீர்ப்புக்கு முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்லப் போவதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
2022-ம் ஆண்டு முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனைத் தொடர்ந்து பாஜகவுடன் இணைந்து உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்தனர். பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.

அப்போது ஏக்நாத் ஷிண்டே பக்கம் சென்ற 40 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உத்தவ் தாக்கரே தரப்பு, சபாநாயகர் ராகுல் நார்வேகரிடம் மனு கொடுத்தது. அதேபோல ஏக்நாத் ஷிண்டே தரப்பு, உத்தவ் தாக்கரேவின் 14 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு தந்தது. இந்த மனுக்கள் மீது சபாநாயகர் முடிவு எதுவும் எடுக்காததால் உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு முறையிட்டது. உச்சநீதிமன்றம் இதில் கடுமை காட்டிய நிலையில் சபாநாயகர் ராகுல் நார்வேகர் அதிரடி தீர்ப்பு வழங்கினர்.
ராகுல் நார்வேகர் தமது தீர்ப்பில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலானதுதான் உண்மையான சிவசேனா. ஏக்நாத் ஷிண்டேவை சட்டசபை குழு தலைவர் பதவியில் இருந்து நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் கிடையாது. உத்தவ் தாக்கரே தரப்பு கொடுத்த 40 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கும் செய்யும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே தரப்பு கொடுத்ததன் அடிப்படையில் 14 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய தேவை இல்லை என அதிரடியாக தெரிவித்திருந்தார். ஏற்கனவே தேர்தல் ஆணையமும் ஏக்நாத் ஷிண்டே தரப்புதான் உண்மையான சிவசேனா என தெரிவித்திருந்த நிலையில் அதனை சபாநாயகர் ராகுல் நார்வேகரும் உறுதி செய்திருந்தார்.
இத்தீர்ப்பு உத்தவ் தாக்கரேவுக்கு கடும் பின்னடைவாகும். இது தொடர்பாக கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, சபாநாயகரின் தீர்ப்பு பச்சை ஜனநாயகப் படுகொலை. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications