உத்தவ் தாக்கரே பேசியது மட்டும் தப்பில்லையா?.. பெயிலில் வந்த அமைச்சர் நாராயண் ரானே விமர்சனம்!
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக நான் பேசியதில் எந்த தவறும் இல்லை, சிவசேனா கட்சியினர் இதைவிட மோசமாக பலரை பற்றி பேசி உள்ளனர் என்று பெயிலில் விடுதலையான மத்திய அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என்று மத்திய அமைச்சர் நாராயண் ரானே கூறிய நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் மீது மகாராஷ்டிராவில் பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இவர் நேற்று இரவு மஹாத் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதையடுத்து மஹாத் நீதிமன்ற இவருக்கு பெயில் வழங்கி உத்தரவிட்டது.

பெயிலில் வந்த நாராயண் ரானே தனது கைது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில், என்னுடைய நல்ல குணத்தை சிலர் தவறாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதை பற்றி எல்லாம் நான் இப்போது பேச விரும்பவில்லை. என்னுடைய யாத்திரை தொடரும்.
பிரதமர் மோடியின் உத்தரவின் பெயரில் நான் என்னுடைய யாத்திரையை தொடங்கினேன். அதை இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் தொடர்வேன். பிரதமர் மோடியின் 7 ஆண்டு ஆட்சி குறித்து மக்களிடம் பேசவே என்னுடைய யாத்திரையை மேற்கொண்டு உள்ளேன். மக்களிடம் பிரதமர் மோடி ஆட்சியின் நன்மைகள் குறித்து பேசுவேன்.
நான் என்ன தவறாக சொல்லிவிட்டேன். ஒரு முதல்வருக்கு நாட்டை குறித்த அடிப்படை அறிவு இல்லாததை விமர்சித்தேன். இது தவறா? இதற்கு முன் சிவசேனா தலைவர்கள் பலர் வரைமுறையை மீறி பேசி இருக்கிறார்கள். ஏன் உத்தவ் தாக்கரே கூட தவறாக பேசி இருக்கிறார் என்று ரானே தனது பேச்சில் குறிப்பிட்டார். உ.பி முதல்வர் ஆதித்யானத்தை செருப்பால் அடிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே முன்பு கூறியதை குறிப்பிட்டு ரானே இப்படி விமர்சனம் செய்தார்.

கடந்த சில நாட்களாக நாராயண் ரானே 'ஜன் ஆசீர்வாத யாத்திரை' என்ற பெயரில் பேரணி நடத்தி வந்தார்.இந்த யாத்திரையில் பேசிய நாராயண் ரானே, இந்தியா சுதந்திரம் அடைந்த தினம் கூட உத்தவ் தாக்கரேவிற்கு தெரியவில்லை. நான் அவர் அருகில் இருந்திருந்தால் அவரின் கன்னத்திலேயே அறைந்திருப்பேன் என்று நாராயண் ரானே குறிப்பிட்டு இருந்தார்.
இவரின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் நேற்று இவர் மகாராஷ்டிரா மாநில போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு பின் பெயிலில் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications