பீமா-கொரேகான் வழக்கு.. 6 மாதம் நிபந்தனை ஜாமீன்.. 81 வயதான வரவர ராவ் 2 வருடத்திற்கு பின் விடுதலை!
மும்பை: பீமா-கொரேகான் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலரும், கவிஞருமான வரவர ராவ் நேற்று இரவு பெயிலில் விடுதலை செய்யப்பட்டார்.
பீமா-கொரேகான் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட வரவர ராவ் கடந்த 2 வருடமாக சிறையில் இருந்தார். சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர் தலோஜா மத்திய சிறையில் இருந்தார். இவருக்கு 81 வயதான நிலையில் பல்வேறு உடல்நல குறைபாடுகள் ஏற்பட்டது.

இந்த குறைபாடுகளை காரணம் காட்டி பெயில் கேட்கப்பட்டது. ஆனால் இவருக்கு தொடர்ந்து பெயில் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் மும்பை ஹைகோர்ட் இவருக்கு பெயில் வழங்கியது. இவரின் உடல்நிலை மோசமானதை அடுத்து மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று இரவு பெயிலில் விடுவிக்கப்பட்டார். 6 மாதம் நிபந்தனை ஜாமீன் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், இதே வழக்கில் கைதான மற்ற நபர்களை தொடர்பு கொள்ள கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிகிச்சை முடிந்து இவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி, புனேவில் நடைபெற்ற கொரேகான்-பீமா போர் நினைவிடம் அருகே நடைபெற்ற வன்முறைக்கு வரவர ராவ் பேச்சுதான் காரணம் என்று புகார் உள்ளது. எல்கர் பரிஷத் மாநாட்டில் வன்முறையை தூண்டும் வகையில் வரவர ராவ் பேசியதாக புகார் உள்ளது.
அதோடு இவருக்கு மாவோயிஸ்டுகள் உடன் தொடர்பு உள்ளது என்றும் புகார் வைக்கப்பட்டது. இதே வழக்கின் வரவர ராவுடன் 9 சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடப்பட்டது.












Click it and Unblock the Notifications