சொர்க்க பூமியாக இருந்து சின்னாபின்னமான வயநாடு! உதவி செய்ய தயார்! ஆனந்த் மகிந்திரா உறுதி
மும்பை: சொர்க்க பூமியாக கருதப்படும் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் தங்கள் உயிர்களை இழந்துள்ள சோகம் ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகளில் நம்மால் முடிந்த உதவியை செய்வோம் என மகிந்திர குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திரா உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
வயநாடு சொர்க்க பூமியாகும். அந்த பூமி இன்று நிலச்சரிவில் சிக்கி சின்னாபின்னமாகி நிறைய உயிர்கள் பறிபோனதை பார்ப்பதற்கு கொடூரமாக உள்ளது. வயநாடு மக்களுக்காக நாம் மனதார பிரார்த்திப்போம். மீட்பு பணிகளில் எந்த மாதிரியான உதவியாக இருந்தாலும் செய்யத் தயார் என தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டுடன் அவர் வயநாட்டின் அழகிய புகைப்படங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் சூரல்மலை பகுதியில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் நேற்று காலை முதலே ஆங்காங்கே லேசான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல்வேறு கட்டடங்களை வெள்ள நீர் சூழ்ந்துக் கொண்டிருக்கிறது.
ஏராளமான வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி, சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அட்டமலையிலிருந்து முண்டகை வரையில் இருந்த ஒரே ஒரு பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.
இந்த நிலச்சரிவில் சூரல்மலை பகுதியில் 500- க்கும் மேற்பட்ட வீடுகள் சிக்கியுள்ளன. இந்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது. அது சூரல்மலை பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பட்டது. இந்த பள்ளிதான் நிவாரண முகாமாக செயல்பட்டு வந்தது. இந்த பள்ளிக்கு அருகே இருந்த வீடுகள், கடைகள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கின.
இதில் இருந்த நூற்றுக்கணக்கானவர்கள் நிலத்தில் அப்படியே புதைந்துவிட்டனர். அவர்களை மீட்கும் பணிகளை கேரள பேரிடர் மீட்பு பணியினர் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பூமிக்கடியில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இதனால் மோப்ப நாய் பிரிவை அழைத்து வந்து உள்ளே ஏதாவது சடலங்கள் இருக்கின்றனவா என்பதை சோதனை செய்ய உள்ளனர்.

இடைவிடாமல் பெய்து வரும் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அது போல் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ராணுவ ஹெலிகாப்டர்கள் வயநாடு சென்றுள்ளன. முண்டக்கையில் இருந்து விமானம் மூலம் மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் மீட்கப்பட்டவர்கள் சுல்தான் பத்தேரியில் உள்ள செயிண்ட் மேரி கல்லூரியில் உள்ள ஹெலிபேடிற்கு கொண்டு வரப்படுவார்கள்.
முகாமில் இருந்து உடல்கள் பிணவறைக்கு கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அது போல் இந்த நிலச்சரிவால் சாலியாறு ஆற்றில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழும் பகுதி என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications