75 வயது முதியவருக்கு வந்த ஆசை.. 17 வயது ஆண் நண்பனுடன் சேர்ந்து 16 வயது சிறுமி போட்ட பக்கா ஸ்கெட்ச்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த தானே மாவட்டத்தில் 75 வயது முதியவருக்கு நடந்த சம்பவம் மொத்த மகாராஷ்டிராவையும் அதிர வைத்துள்ளது. கடை முதலாளியான 75 வயது முதியவர், தனது கடையில் வேலை செய்த 16 வயது சிறுமியிடம் அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் 16 வயது சிறுமி, தனது 17 வயது காதலனுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. அது பற்றி விரிவாக பார்ப்போம்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த தானே மாவட்டத்தில் இருக்கிறது உத்தன். இங்குள்ள ஒரு தர்கா அருகில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் விசாரணையில் தானே மாவட்டம் போரிவிலி கண்பத் பாட்டீல் நகரை சேர்ந்த 75 வயது முதியவர் தான் அவர் என்பது தெரியவந்தது. இவர் போரிவிலி பகுதியில் கடை நடத்தி வந்திருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி முதல் அவர் காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது முதியவரின் கடையில் வேலை பார்த்த 16 வயது சிறுமி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த சிறுமியை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது சிறுமி, அவரது 17 வயது ஆண் நண்பருடன் சேர்ந்து முதியவரை கொலை செய்து விட்டதாக கூறி போலீசாரை அதிர வைத்துள்ளார். 16 வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன் பெற்றோருடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அப்போது முதியவர் சிறுமிக்கு அவரது கடையில் வேலை கொடுத்திருக்கிறார்.
சம்பவம் நடந்த அன்று அவர் வேலை இருப்பதாக கூறி சிறுமியை வெளியே அழைத்து சென்றார். உத்தன் பகுதியில் ஆட்டோவில் சென்ற போது அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி உடனடியாக அவரது ஆண் நண்பருக்கு செல்போனில் நடந்தவற்றை கூறியுள்ளார். மேலும் வாட்ஸ் அப்பில் அவருக்கு 'லைவ் லொக்கேசன்' அனுப்பினார். அதன் மூலம் சிறுமியின் ஆண் நண்பர் அங்கு விரைந்து வந்தார்.
இந்த நிலையில் உத்தன் பகுதியில் உள்ள தர்கா அருகில் சிறுமி, ஆண் நண்பருடன் சேர்ந்து முதியவரை கல்லால் அடித்து கொலை செய்த்தாக கூறப்படுகிறது. பின்னர் உடலை அங்குள்ள புதரில் வீசிவிட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டார்களாம். சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமி மற்றும் அவரது ஆண் நண்பரை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை சிறுமி தனது ஆண் நண்பரை சம்பவ இடத்துக்கே வரவழைத்து தீர்த்து கட்டிய சம்பவம் தானே மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications