"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ்
மும்பை: பெண் ஒருவருக்கு ரூ.370க்கு பிரியாணி வாங்கி கொடுத்துவிட்டதால்.. அந்த பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்வேன் எனப் பொருள்படும் வகையில் இளைஞர் ஒருவர் பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்தது. சமூக வலைத்தளங்களில் இதற்கு மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அந்த நபர் தனது வேலையை இழந்துள்ளார். மேலும், போலீசாரும் இப்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில காலமாகவே.. குறிப்பாக டிரெண்டிங் கலாச்சாரம் வந்த பிறகு நகைச்சுவை என்பது எல்லை மீறுவதாக அமைகிறது. மோசமான மற்றும் முகம் சுளிக்க வைக்கும் கருத்துகளைக் கூறி, அதை காமெடி எனச் சொல்லும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் கடந்த சில நாட்களாகவே விவாதமாகியுள்ளது.

370 ரூபாய் பிரியாணி
சமீபகாலமாக இந்த 370 ரூபாய் பிரியாணி விஷயம் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைச் சாதாரண காமெடி எனக் கடந்து செல்ல முடியாது எனச் சொல்லும் சமூக ஆர்வலர்கள், இது பெண்களின் சம்மதம் மற்றும் ஆணாதிக்க மனநிலை நமது சமூகத்தில் எந்தளவுக்கு இருக்கிறது என்பதையே காட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்..
மும்பையைச் சேர்ந்த பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் பிரணித் மோர் என்பவர் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் இந்தச் சர்ச்சை தொடங்கியது. நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பொதுவாக மேடையில் இருப்பவர் பார்வையாளர்களிடம் பேசுவது வழக்கம். அதில் இருந்து எதாவது கண்டெண்ட் எடுப்பார்கள். அப்படிப் பேசும்போது, குருகிராமை சேர்ந்த ஹிமான்ஷு ஜங்ரா என்ற இளைஞர் தான் ஒரு பெண்ணுடன் டேட்டிங் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
சர்ச்சை
அந்த இளைஞர் மேடையில் பேசும்போது, "நான் ஒரு பெண்ணுடன் டேட்டிங் சென்றேன். நாங்கள் ஒரு உணவகத்தில் ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்டோம். அதன் விலை 370 ரூபாய். சாப்பிட்டு முடித்த பிறகு, அந்தப் பெண் தன்னை வீட்டில் விடுமாறு கேட்டார்.. இது கொஞ்சம் ஏமாற்றம் தான்.. அப்போது எனக்குள்.. நான் 370 ரூபாய் செலவு செய்துள்ளேன்.. அதை நான் வசூலிக்காமல் விட மாட்டேன் என நினைத்துக் கொண்டேன். நான் அந்த பெண்ணை எனது ரூமிற்கு அழைத்து செல்லலாம் என இருந்தேன். ஆனால் முதல் டேடிலேயே இதைச் செய்தால்.. அந்த பெண் தவறாக எடுத்துக் கொள்வார் என்பதால் எதையும் செய்யவில்லை" என்றார்.
இதுவே சர்ச்சையாக வெடித்தது. அவர் இதை ஒரு ஜோக்காக சொல்ல, அங்கிருந்த கூட்டமும், பிரணித் மோரும் சிரித்தனர். ரூ.370க்கு பிரியாணி வாங்கி கொடுத்துவிட்டதால் உடலுறவு கொள்ள வேண்டும் எனப் பேசுவதைக் கண்டிக்காமல் சிரித்தது மட்டுமின்றி, அந்த இளைஞருக்குச் சிறந்த காமெடி எனச் சொல்லி 5,000 ரூபாய் பரிசும் வழங்கினார் பிரணித் மோர்!
கடும் தாக்கு
மேலும், இந்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களிலும் வெளியிட்டார். இதைப் பார்த்து மக்கள் கடும் கொந்தளித்தனர். பலரும் இதை மிகக் கடுமையாகக் கண்டித்தனர். ஒரு பெண்ணுக்கு உணவு வாங்கிக் கொடுத்துவிட்டால், அந்தப் பெண்ணின் உடல் மீது அந்த ஆணுக்கு உரிமை வந்துவிடும் என்ற தவறான எண்ணத்தை இது ஏற்படுத்துவதாகச் சாடினர். ஒரு பெண்ணின் சம்மதத்தையும் 370 ரூபாய் பிரியாணியுடன் ஒப்பிட்டுப் பேசியது பெண்களை இழிவுபடுத்துவதாக இருப்பதாகவும் சாடினர். குறிப்பாக வசூல் செய்வேன் என்ற வார்த்தை, அந்தப் பெண்ணை வற்புறுத்திச் செய்ய வைப்பேன் என்பது போல இருப்பதாகவும் சாடினர்.
பாய்ந்த நடவடிக்கை
இந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவிய சூழலில், இந்த மட்டமான காமெடி செய்த இளைஞர் ஹிமான்ஷு ஜங்ராவை அவரது நிறுவனம் வேலையை விட்டு தூக்கியுள்ளது. அவரது கருத்து தங்கள் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என்று சொல்லி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பிரணித் மோர் அந்த வீடியோவை நீக்கியதுடன், தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டார்.
மேலும், மும்பை போலீசாரும் இந்த விவகாரத்தில் களத்தில் இறங்கியுள்ளது. காமெடியன் பிரணித் மோர் மற்றும் இந்த சர்ச்சை கருத்துகளைக் கூறிய ஹிமான்ஷு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் #BiryaniIsNotConsent என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.












Click it and Unblock the Notifications