ஆட்சியில் இருப்பதால் ரொம்ப ஆடாதீங்க.. பாஜகவை உடைக்கவும் எமன் வருவான்! வெளுத்துவிட்ட மம்தா பானர்ஜி
மும்பை: ‛‛மகாராஷ்டிராவில் ஒழுக்கமற்ற முறையில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிக்கிறது. பாஜகவும் ஒருநாள் மத்தியில் ஆட்சியை விட்டு செல்ல வேண்டி வரும். அப்போது பாஜகவையும் யாராவது உடைக்கலாம்'' என மம்தா பானர்ஜி பரபரப்பாக பேசினார்.
மகாராஷ்டிரா முதல்வராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே உள்ளார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி வைத்து ஆட்சி நடத்துவதில் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6-க்கு ஒத்திவைப்பு!
மகா விகாஷ் அகாடி எனும் இந்த கூட்டணி ஆட்சி மீது சிவசேனா எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனை வெளிக்காட்டும் வகையில் அவர்கள் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறி உள்ளனர்.
மகாராஷ்டிரா அரசியல் நிலவரம்
அதாவது சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். சிவசேனா கட்சிக்கு மொத்தம் 55 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் ஏக்நாத் ஷிண்டேவுடன் சிவசேனாவின் 40 எம்எல்ஏக்களும், சுயேச்சைகள் 6 பேரும் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக வெறும் 12 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
பின்னணியில் பாஜக இருப்பதாக...
இந்த நடவடிக்கைக்கு பின்னால் பாஜக உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. 2019 சட்டசபை தேர்தலின்போது பாஜக-சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாஜக 105 இடங்களில் வென்ற நிலையில் சிவசேனா 55 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும் சிவசேனா பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. இதனால் எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டு வந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக அமைதி காத்த பாஜக தற்போது ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மகாராஷ்டிராவில் ஆட்சி கலைக்க முயற்சி
இந்நிலையில் தான் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து பாஜகவை மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி மம்தா பானர்ஜி கூறியதாவது: மகாராஷ்டிராவில் ஒழுக்கமற்ற முறையில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிக்கிறது. மகாராஷ்டிரா எம்எல்ஏக்களை அஸாமுக்கு அனுப்பியதற்கு பதில் மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் நன்கு கவனித்து அனுப்புகிறோம்.
பாஜகவும் உடைபடும்
மகாராஷ்டிரா அரசியலில் உத்தவ் தாக்கரே உள்பட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். இன்று பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இதனால் பணம், வலிமை, மாபியா பலத்தை பயன்படுத்துகிறது. ஆனால் பாஜகவும் ஒருநாள் ஆட்சியை விட்டு செல்ல வேண்டி வரும். பாஜகவையும் யாராவது உடைக்கலாம். இது தவறானது. இதற்கு ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டேன்'' என்றார்.