சரத்பவாருக்கு துரோகம்.. குடும்பத்தையே நிலைக்குலைய செய்த அஜித் பவார்.. யார் இவர்?
Recommended Video
மும்பை: சரத்பவாருக்கு தெரியாமல் பாஜகவுக்கு ஆதரவு அளித்து மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைய வைத்ததன் மூலம் சரத்பவார் குடும்பத்தையே நிலைக்குலைய செய்துவிட்டார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி தலைமையிலான ஆட்சி அமைய இருந்தது. இதற்காக பல நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பெரும் இழுபறிக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேதான் முதல்வர் என சரத்பவார் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சிவசேனாவின் கனவை சிதைத்துவிட்டு சரத்பவாரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு சிவசேனாவுக்காக தயாரிக்கப்பட்ட என்சிபி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை எடுத்துக் கொண்டு பாஜகவுக்கு ஆதரவு அளித்தார் அஜித் பவார். இத்தகைய சாணக்கியத்தனம் செய்த அஜித் பவார் யார்?

ஆரம்பக் கல்வி
என்சிபி கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் அனந்தராவின் மகன்தான் இந்த அஜித் பவார். இவர் கடந்த 1959இல் பிறந்தார். அஜித் பவார் ஆரம்பக் கல்வி படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் வளர்ந்து வரும் அரசியல் தலைவராக சரத்பவார் திகழ்ந்தார்.

பாராமதி
இந்த நிலையில் அஜித் பவார் 1982-ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தார். அவர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1991-ஆம் ஆண்டு முதல் 16 ஆண்டுகளுக்கு புனே மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். 1991-ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் முதல் முறையாக பாராமதி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

5 முறை எம்எல்ஏ
நரசிம்மராவ் அரசில் சரத்பவார் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். தனது சித்தப்பா சரத்பவாருக்காக பாராமதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அஜித் பவார், பாராமதி சட்டசபை தொகுதியில் நடந்த தேர்தலில் 1995, 99. 2004, 2009, 2014 ஆகிய காலகட்டங்களில் போட்டியிட்டு தொடர்ந்து 5 முறை எம்எல்ஏவானார்.

மின்சார துறை அமைச்சர்
பின்னர் மகாராஷ்டிர மாநில முதல்வராக சுதாகர் ராவ் இருந்த போது விவசாயம் மற்றும் மின்சார துறை அமைச்சராக அஜித் பவார் தேர்வு செய்யப்பட்டார். சரத்பவார் முதல்வரானதும் 1992-ஆம் ஆண்டு மண் பாதுகாப்பு, திட்டம், மின்சாரத் துறை அமைச்சராகவும் அஜித் பதவி வகித்தார்.

அமைச்சர்
1999-ஆம் ஆண்ட நடந்த தேர்தலில் காங்கிரஸ்- என்சிபி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து. அப்போது பவார் கேபினட் அமைச்சராக பதவியேற்றார். பின்னர் அசோக் சவானின் அரசில் நீர் வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருந்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு காங்கிரஸ்- என்சிபி ஆட்சியில் புனே மாவட்டத்தின் கார்டியன் அமைச்சராக இருந்தார்.

துணை முதல்வர்
சரத்பவாரின் அரசியல் வாரிசாக அஜித் பவார் கருதப்பட்ட நிலையில் 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே அரசியலுக்கு வந்தவுடன் அவர் ஓரங்கட்டப்படுவதாக கருதினார். 2012-ஆம் ஆண்டு பிரித்விராஜ் சவாண் அரசில் துணை முதல்வராக அஜித் இருந்தார்.

துரோகம்
2014-இல் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் ஆட்சியை இழக்கும்வரை அமைச்சராக இருந்தார். தற்போது சரத்பவாருக்கு துரோகம் செய்து குடும்பத்தையே நிலைகுலைய வைக்கும் செயலை செய்து மகாராஷ்டிரத்தின் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications