பழங்குடி மக்களின் காட் பாதர்.. ஸ்டேன் சுவாமி மீது "அதிகாரங்கள்" ஆத்திரமடைந்தது ஏன்?
மும்பை: சமூக செயற்பாட்டாளர், பாதிரியார், ஸ்டேன் சுவாமி 2020ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 8ம் தேதி இரவு என்.ஐ.ஏ போலீசாரால் கைது செய்யப்பட்டபோது மத்திய இந்தியாவின் பல பகுதிகளும் அதிர்ந்து போயின. 70 வருடங்களாக அந்த பிராந்திய ஆதிவாசி மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவராயிற்றே ஸ்டேன் சுவாமி.
Recommended Video
83 வயதான ஸ்டேன் சுவாமி, தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டார். 2018ம் ஆண்டு மகாராஷ்டிராவின், பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் வரிசையாக குற்றங்கள் சுமத்தப்பட்டன.
ஆனால், ஸ்டேன் சுவாமியை தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களுக்கு இந்த குற்றச்சாட்டுகள் வெறும் அரசியல் நோக்கம் கொண்டவை என்பதுதான் கருத்தாக இருந்தது.
8 மாதங்கள் சிறை.. ஆனால் ஒரு நாள்கூட விசாரணை இல்லை.. உபா சட்டத்தில் கைதான ஸ்டேன் சுவாமி காலமானார்
தமிழர் ஸ்டேன் சுவாமி
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1937ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி பிறந்தவர் ஸ்டேன் சுவாமி. ஸ்டானிஸ்லாஸ் லூர்துசாமி என்பதுதான் அவரது இயற்பெயர். காலப் போக்கில் அது ஸ்டேன் சுவாமியாக மாறியது. ஸ்டேன் சாமி என்று அழைப்போரும் உண்டு. செயின்ட் ஜோஜப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார் ஸ்டேன் சாமி. பள்ளி நாட்களிலேயே, பாதிரியார் ஒருவரோடு ஏற்பட்ட பழக்கத்தால் சமூக தொண்டுகளில் ஈடுபடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. 1957ம் ஆண்டு மதக் கல்வியை கற்க ஆரம்பித்துள்ளார்.
கல்வியும், தொண்டும்
1965ம் ஆண்டில்தான் சுவாமியின் வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டன. பாதிரியாருடன் சமூக தொண்டு செய்ய மேற்கு சிங்பூம், சைபாசா, செயின்ட் சேவியர் உயர்நிலைப்பள்ளியில் தங்கியிருந்தார். ஆசிரியராகவும், விடுதித் தலைவராகவும் இருந்த அவரது அனுபவங்கள் சுவாமிக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அவர் தனது மாணவர்களுடன் செவ்வாய்க்கிழமை சாய்பாசாவில் உள்ள வாராந்திர சந்தைக்கு செல்வதுடன், வெளி வணிகர்களும் அவர்களின் முகவர்களும் பழங்குடியினரை எவ்வாறு ஏமாற்றினார்கள் என்பதை நேரில் பார்த்தார். "நான் வலியை உணர்ந்தேன், ஆனால் அதைப் பற்றி எதுவும் செய்ய முடியவில்லை," என்று ஸ்டேன் சுவாமி ஒருமுறை கூறியுள்ளார்.
உலக நாடுகளின் ஆதிவாசிகள் நிலைமை
1967 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸின் மணிலாவுக்கு இறையியல் படிப்பதற்கு சென்றார் ஸ்டேன் சாமி. சமூகவியலில் முதுகலை கல்வியை முடித்தார். பழங்குடி மக்களுடன் அங்கும் பழக்கம் ஏற்பட்டது. உலகின் பல்வேறு பிராந்தியங்களிலும் பழங்குடி மக்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதையும் அவர்களின் போராட்டங்களையும் பற்றி அவருக்கு அதிக புரிதலைக் கொடுத்தன.
மக்கள் தொண்டு
1971 ஆம் ஆண்டில் ஜாம்ஷெட்பூர் திரும்பிய அவர், இப்பகுதிக்கான கத்தோலிக்க நிவாரண சேவைகள் தொண்டு இயக்குநராகப் பொறுப்பேற்றார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள், 1971 மற்றும் 1972 இன் ஒரு பகுதியை இங்கே செலவிட்டார் - நிவாரணப் பொருட்களுக்காக ஒரு குடோன் அமைத்து ஏற்பாடு செய்தார். இந்த காலகட்டத்தில், பெங்களூரில் உள்ள இந்திய சமூக நிறுவனத்தில் சமூக மேம்பாடு குறித்த மூன்று மாத படிப்பிலும் பங்கேற்றார். மேலும் இயக்குனர் ஹென்றி வோல்கனுடன் தொடர்பில் இருந்தார்.
ஆதிவாசிகளோடு தங்கினார்
ஜாம்ஷெட்பூர் ஜேசுட் மாகாணத்தின் தலைவரான பில் டோம், கிராமத்தில் வாழ விரும்புவதாகவும், அவர்களின் மொழியைக் கற்றுக் கொள்ளவும், அவர்களின் உலகத்தைப் பற்றி நெருக்கமாக அறிந்து கொள்ளவும் விரும்புவதாக கூற, ஸ்டேன் சாமி வாழ்க்கையில் அடுத்த குறிப்பிடத்தக்க திருப்பம் ஏற்பட்டது. டோமின் ஆசீர்வாதத்துடன், சுவாமி படாய்பீர் கிராமத்திற்கு குடிபெயர்ந்தார். சுமார் 15 கி.மீ சுற்றளவில் உள்ள மக்களோடு ஸ்டேன் சாமி தொடர்பில் இருந்தார். மேலும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி அதன் அனைத்து பரிமாணங்களையும், தர்க்க ரீதியாக சிந்திக்க அவர்களுக்கு உதவினார். விரைவில், அவரது முன்னாள் மாணவர்கள் மற்றும் அகில இந்திய கத்தோலிக்க பல்கலைக்கழக கூட்டமைப்பின் பின்னணியுடன் சில தன்னார்வலர்கள் ஸ்டேன் சாமியுடன் இந்த சமூக பணியில் சேர்ந்து கொண்டனர்.
அரசால் விரட்டப்பட்ட ஆதிவாசிகள்
1990களின் இறுதியில், ஆதிவாசிகள் மற்றும் மூல்வாஸிஸ் தங்கள் நிலங்களிலிருந்து விரட்டப்பட்டனர். பாலமு மற்றும் கும்லா மாவட்டங்களில் ஃபீல்டு ஃபயரிங் ரேஞ் திட்டம் கொண்டுவரப்பட்டது. ராஞ்சி மற்றும் மேற்கு சிங்பூமில் கோயல்-கரோ அணை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் ஆதிவாசிகள் அவர்கள் வாழ்விடங்களை பறிகொடுக்க வேண்டி வந்தது. இந்த திட்டங்கள் எதிர்த்து போராடுவதில் ஈடுபட்ட அமைப்புகள் மற்றும் இயக்கங்களின் முயற்சிகளை ஒருங்கிணைக்க ராஞ்சியில் ஒரு மையத்தை நிறுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த மையத்தை உருவாக்கும் பொறுப்பு ஸ்டான் சுவாமிக்கு வழங்கப்பட்டது.
போராட்ட ஒருங்கிணைப்பு
ஜூன் 2001 இல், சுவாமி சாய்பாசாவிலிருந்து ராஞ்சிக்குச் சென்று புருலியா சாலையில் உள்ள கரானா குடியிருப்பில் வசிக்கத் தொடங்கினார். ஆதிவாசிகளின் வெளியேற்றத்திற்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைக்கும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக அவர் பல அமைப்புகளையும் இயக்கங்களையும் தொடர்பு கொள்ளத் தொடங்கினார்.
ஜார்கண்ட் அரசின் ஒடுக்குமுறை
2010 களின் நடுப்பகுதியில், ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தின் முண்டா இன, ஆதிவாசிகள் தங்கள் கிராமங்களில் உள்ள சொத்துக்களில், கல் பலகைகளை அமைக்கத் தொடங்கினர். இந்திய அரசியலமைப்பின் ஐந்தாம் அட்டவணையின் விதி, பழங்குடிப் பகுதிகளுக்கு சிறப்பு சுயாட்சியை வழங்குகின்றன. இந்த அடிப்படையில், இது தவறு கிடையாது என்று கூறப்பட்டது. ஆனால், எவ்வாறாயினும், மாநிலத்தில் ஆட்சியிலிருந்த பாரதிய ஜனதா கட்சி இந்த விஷயத்தை "வளர்ச்சி எதிர்ப்பு மற்றும் தேச விரோதம்" என்று பார்த்தது. இந்த இயக்கத்தை முறியடிக்க துணை ராணுவத்தை வரவழைத்தது. போலீசை குவித்தது.
தேச துரோக வழக்கில் கைது
ஆதிவாசிகளுக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டது. அரசாங்கத்தின் இரக்கமற்ற அணுகுமுறை குறித்து பலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டனர். ஆதிவாசிகளுக்கு துணை நின்ற, ஸ்டான் சுவாமி உட்பட 20 ஆர்வலர்கள் மீது மாநில அரசு தேசத் துரோக வழக்குகளைத் தொடர்ந்தது. அரசு பேச்சுவார்த்தை மூலம் ஆதிவாசிகளுடனான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றுதான் பேஸ்புக்கில் எழுதியிருந்தார் ஸ்டேன் சாமி. ஆனால் ஏன் தேசத் துரோக வழக்கு பாய்ந்தது என்பது அவரது ஆதரவாளர்களுக்கே புரியவில்லை.
பல புத்தகங்கள் எழுதியவர்
ஜார்கண்டில் ஸ்டேன் சுவாமி செய்த சமூக பணிகள் மேலும் பல அமைப்புகளுக்கு ஊக்கம் கொடுத்தது. அறிவுஜீவிகளின் ஆதரவை பெற்றது. ஆதிவாசிகளின் உரிமைகள் குறித்தும், அது எப்படி அரசாங்கங்களால் பறிக்கப்படுகிறது என்பது பற்றியும் பல புத்தகங்களை எழுத ஆரம்பித்தார், ஸ்டேன் சுவாமி. சமூக உறவில், அறிவியல் முறையில் பகுப்பாய்வு செய்வதுதான், ஸ்டேன் சுவாமி ஸ்டைலாக இருந்தது. காரல் மார்க்சின் தத்துவங்களுடன் ஒத்துப்போனது, ஸ்டேன் சுவாமி எழுத்துக்கள். ஜார்கண்டில் ஆதிவாசிகள் அவர்கள் நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்படுவதை தடுப்பதில் ஸ்டேன் சுவாமி முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்க ஆரம்பித்தார். இயற்கை வளங்களில் ஆதிவாசிகளுக்கு உள்ள பங்குகள் காக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
குரலை ஒடுக்க நினைத்த அதிகாரங்கள்
ஆதிவாசிகளுக்கு எதிரான அத்தனை கொள்கைகள், அரசியல்கள் குறித்தும் விரல் நுனியில் தகவல் வைத்திருந்தார், ஸ்டேன் சுவாமி. அரசு மற்றும் சில கார்பொரேட் நிறுவனங்கள் ஆதிவாசிகளின் உரிமைகளை பறிக்கும்போது, ஸ்டேன் சுவாமி அவர்களுக்கு எதிராக நின்றார். இதன் காரணமாகத்தான், ஸ்டேன் சுவாமி வாயை அடைக்க அதிகாரங்கள் தொடர்ந்து முயன்றபடியே இருந்தன. ஆனால் சமரசம் இல்லாமல் சமர் செய்த ஸ்டேன் சுவாமி, மகாராஷ்டிரா சிறையில், உரிய சிகிச்சைகள் இன்றி அவதிப்பட்டு, இன்று காலத்தின் மடியில் இளைப்பாற சென்று விட்டார்.