"பொண்ணா இருந்துட்டு.." பாரத மாதா குறித்து சர்ச்சை.. சமூக ஆர்வலருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு
மும்பை: மகாராஷ்டிரா ஆர்வலர் சம்பாஜி பிடே என்பவர் டிவி கேமராவிலேயே பாரத மாதா குறித்துக் கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சம்பாஜி பிடே. தனது சிறு வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பயணித்த இவர், பின் தனியாக அமைப்பு ஒன்றை உருவாக்கிக் கொண்டார்.
1980களில் புதிய அமைப்பைத் தொடங்கிய இவர், தொடர்ச்சியாகச் சிவாஜியின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சென்று வருவதாகக் கூறுகிறார்.

சம்பாஜி பிடே
அதேநேரம் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளைக் கூறுவதையும் இவர் வாடிக்கையாக வைத்து இருக்கிறார். இப்போது பாரதமாதா குறித்து இவர் கூறியுள்ள கருத்துகள் தேசிய அளவில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. கடந்த புதன்கிழமை சம்பாஜி பிடே மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அம்மாநிலத் தலைமைச் செயலகத்தில் சந்தித்துக் கொஞ்ச நேரம் தனியாக ஆலோசனை நடத்தினார்.

பொட்டு கூட வைக்காமல்
அதன் பின்னர் வெளியே வந்த அவரிடம் பெண் செய்தியாளர் ஒருவர், சில கேள்விகளைக் கேட்க முயன்றார். இருப்பினும், அந்த பெண் செய்தியாளர் நெற்றியில் பொட்டு வைக்கவில்லை என்பதால் இவர் செய்தியாளரிடம் பேச மறுத்துவிட்டார். மேலும், அந்த பெண் நிருபரிடம் பிண்டே பேட்டி எடுக்க வருவதற்கு முன் பொட்டு வைத்துக்கொண்டு வர வேண்டும் என்று அப்பெண்ணிடம் கூறுகிறார்.

பாரத மாதா விதவையா
இவை அனைத்தும் அந்த வீடியோவில் மிகத் தெளிவாகப் பதிவாகி உள்ளது. பெண் செய்தியாளருடன் பேச மறுத்த சம்பாஜி பிடே, "ஒரு பெண் என்பவர் பாரத மாதாவுக்கு நிகரானவர்.. பொட்டு கூட வைக்காமல் விதவை போல் தோன்றக் கூடாது. அது ரொம்பவே தவறு" என்று கூறுகிறார். இதை அவர் மராத்தி மொழியில் கூறிவிட்டு, அங்கு நிற்காமல் வேகமாக நகர்ந்து செல்கிறார்.

சர்ச்சை
இவை அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது. அவரது இந்தக் கருத்துக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொட்டு வைப்பது என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை என்றும் இதற்காகப் பெண்ணை புறக்கணிப்பது தவறு என்றும் பலரும் கூறி வருகின்றனர். மேலும், அவர் இந்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

நோட்டீஸ்
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகங்கர் விளக்கம் கேட்டு உள்ளார். சம்பாஜி பிடே இதுபோன்ற கருத்துகளைக் கூறுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே, கடந்த 2018இல், தனது பழத்தோட்டத்தில் இருந்து மாம்பழங்களைச் சாப்பிட்டால் ஆண் குழந்தைகள் பிறக்கும் என்று சம்பாஜி பிடே கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications