சர்வதேச யோகா தினம்.. நாடு முழுக்க அரசியல் தலைவர்கள் பங்கேற்பு.. பிரம்மாண்ட கொண்டாட்டம்!
மைசூர்: யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் யோகா தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.
Recommended Video
சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுக்க கடைப்பிடிக்கப்படுகிறது. யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம், மைசூரு அரண்மனையில் நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்தியாவில் இன்று 75 நகரங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மொத்தம் 15 ஆயிரம் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
யோகா உலக அமைதியை.. மன அமைதியை ஏற்படுத்தும்.. மைசூரில் யோகா செய்த பிரதமர் மோடி பேச்சு!
தலைவர்கள் பங்கேற்பு
யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் யோகா செய்தனர். பாஜக ஆளும் மாநிலங்களில் அமைச்சர்கள் பலர் நேரடியாக மக்களோடு மக்களாக அமர்ந்து யோகா செய்தனர். டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் யோகா செய்தார். அதேபோல் அமைச்சர் மனிஷ் சிசோடியா அங்கு யோகா செய்தார். உத்தர பிரதேசத்தில் அமைச்சர்கள் யோகா தினத்தை அனுசரித்தனர்.
அமைச்சர்கள்
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா நொய்டாவில் யோகா தினத்தை கொண்டாடினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் யோகா செய்தார். அதேபோல் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ரிஷிகேஷில் யோகாசனம் செய்தார். அங்கு இருக்கும் சிவன் சிலைக்கு முன் இவர் யோகா செய்தார். இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். இதற்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
ராணுவ வீரர்கள்
எப்போதும் யோகா தினத்தில் ராணுவ வீரர்களும் யோகா செய்வது வழக்கம். அதேபோல் இன்றும் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு எல்லைகளில் ராணுவ வீரர்கள் யோகா செய்தனர். 17,000 அடி உயரத்தில் கடும் குளிரில் யோகா செய்து அசத்திய இந்தோ - திபெத் எல்லை வீரர்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. மேல் சட்டை இல்லாமல் இவர்கள் குளிரில் சூரிய நமஸ்காரம் செய்து யோகா செய்தது பலரையும் வியக்க வைத்தது.
அலங்காரம்
2022 சர்வதேச யோகா தினத்தன்று ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணலால் சிலையை செதுக்கியுள்ளார். இவர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை இதில் வரைந்துள்ளார். அங்கு இன்று காலையில் இருந்து பலர் யோகாசனம் செய்து வருகின்றனர். அதேபோல் பாஜக ஆளாத மற்ற மாநிலங்களிலும் யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.