தமிழ்நாட்டை முந்தியது கர்நாடகா காங். அரசு! பெண்களுக்கு ரூ2,000 வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்!
மைசூரு: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு மாதம் ரூ2,000 வழங்கும் திட்டம் நாளை தொடங்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்ட தொடக்க விழாவில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் 2021 தேர்தல் வாக்குறுதிகளில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ1,000 வழங்குவோம் என்பது. திமுக ஆட்சி அமைந்தது முதலே இத்திட்டம் எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நிதிநிலைமையை காரணம் காட்டி இத்திட்டம் ஒத்திபோடப்பட்டு வந்தது.

ஒருவழியாக செப்டம்பர் 15-ந் தேதி முதல் "தகுதி" உள்ள மகளிர் அனைவருக்கும் மாதம் ரூ1,000 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் அனைவருக்கும் என அறிவித்துவிட்டு தகுதி உள்ள மகளிருக்கு மட்டும் என ஆளும் திமுக அரசு திருத்தம் செய்ததும் பெரும் சர்ச்சையையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது. இதனை சரி செய்வதற்கும் ஆளும் திமுக அரசு தீவிரமாக முயற்சித்தும் வருகிறது.
திமுக பாணியில் அண்மையில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் பெண்களுக்கு மாதம் ரூ2,000 வழங்குவோம் என அறிவித்தது. கர்நாடகாவில் காங்கிரஸும் ஆட்சியைப் பிடித்தது. அதேநேரத்தில் பெண்களுக்கு ரூ2,000 வழங்கும் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்துவதில் காங்கிரஸ் அரசு தீவிரம் காட்டி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதனையடுத்து அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 2,000 வழங்கும் "கிரக லட்சுமி" திட்டம் நாளை முதல் கர்நாடகாவில் அமலுக்கு வருகிறது. மைசூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இத்தொடக்க விழாவில் பங்கேற்கிறார்.
முன்னதாக இன்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்டோர் மைசூர் சென்றடைந்தனர். அங்கு மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபாடு நடத்தினர்.
கர்நாடகா அரசானது மொத்தம் 1.1 கோடி பெண்களுக்கு மாதம் ரூ2,000 உதவித் தொகை வழங்குகிறது. இத்திட்டத்துக்காக கர்நாடகா மாநில அரசு ரூ17,500 கோடி நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறுவதால் கர்நாடகா ஆளும் காங்கிரஸ் அரசு முனைப்புடன் இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்துகிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications