நிலத்தகராறு: அரசு மருத்துவர், தாய் மீது திமுக நிர்வாகி கடும் தாக்குதல்.. பரபரப்பை கிளப்பிய வீடியோ!
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் அரசு மருத்துவரையும் அவரது தாயையும் கிளீனிக்கிற்குள் புகுந்து திமுக நிர்வாகி ஒருவர் தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் பெரிய கடை வீதியில் சித்த மருத்துவர் ஆறுமுகம் என்பவர் ஒரு கிளீனிக்கை வைத்து நடத்தி வருகிறார். அதன் அருகே இவரது மெடிக்கல் ஷாப்பும் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவராகவும் ஆறுமுகம் பணியாற்றி வருகிறார்.
இவர் இங்கு பணியாற்றுவது மட்டும் அல்லாமல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தனது கிளீனிக்கில் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சையையும் வழங்கி வருகிறார்.
சிஎன்ஜி, பிஎன்ஜி எரிவாயு விலை குறைப்பு.. ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. குஜராத்தில் திடீர் சலுகை
பழக்கடை
சித்த மருத்துவர் ஆறுமுகத்திற்கும், பழக்கடை நடத்தி வரும் சண்முகம் மற்றும் அவரது மகன் மணிமாறனிற்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த தகராறு தொடர்பாக ஆறுமுகம் நாகை நகர காவல் நிலையத்தில் புகார் கூறியிருந்தார். புகாரின் பேரில் ஆறுமுகம் தரப்பையும் சண்முகம் தரப்பையும் போலீஸார் அழைத்திருந்தனர்.
ஆதரவாக பேசுதல்
சண்முகம் தரப்பினர் தங்களுக்கு ஆதரவாக பேசுவதற்காக திமுக வார்டு செயலாளர் பாபு என்பவரை அழைத்து கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் போலீஸாருக்கு பதிலாக பாபு பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு ஆறுமுகம் உடன்படவில்லை என தெரிகிறது.
ஆத்திரம் அடைந்த திமுக நிர்வாகி
இதனால் ஆத்திரம் அடைந்த பாபு அடியாாட்களுடன் ஆறுமுகத்தின் சித்த மருத்துவ கிளீனிக்கிற்கு சென்று அங்கிருந்த பொருட்களை உடைத்ததாக தெரிகிறது. அதை தடுத்த ஆறுமுகத்தையும் அவரது தாய் சாந்தியையும் பாபு தரப்பினர் தாக்கினராம். காயமடைந்த இருவரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் திமுக நிர்வாகி அடியாட்களுடன் கிளீனிக்கை அடித்து நொறுக்கிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை ட்வீட்
இந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் வீடியோவுடன் வெளியிட்டு கூறியிருப்பதாவது: தமிழகத்தின் மக்கள் தூக்கத்தை தொலைக்க வேண்டும் என திமுகவினர் கங்கணம் கட்டியுள்ளதையே இந்த சம்பவம் காட்டுகிறது. தன்னை தூங்க விடுங்கள் என முதல்வர் ஸ்டாலின் திமுக பொதுக் கூட்டத்தில் அறிவுறுத்தியிருந்தார். இங்கே பாருங்க, திமுக நிர்வாகி ஒருவர் நாகப்பட்டினத்தில் ஒரு மருத்துவரை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதை பார்க்கும் போது திமுக நம் சமூகத்தை எங்கே அழைத்து செல்கிறது என்பது அதிர்ச்சி அளிக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.