திமுக கெடு வைத்தால்.. அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்காது: சுப.வீரபாண்டியன் எச்சரிக்கை
நாகப்பட்டினம் : பெட்ரோல் டீசல் விலையை 72 மணி நேரத்திற்குள் குறைக்க வேண்டும் இல்லை என்றால் கோட்டை முற்றுகை இடப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கெடு விதித்திருந்த நிலையில், திமுகவினர் கெடு வைத்தால் அண்ணாமலை மேடையில் பேச ஆள் இருக்க மாட்டார்கள் என சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாமான்ய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவந்த நிலையில் கடந்த 40 நாட்களாக விலையில் எந்தவித மாற்றமுமின்றி இருந்தது. இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6ம் குறைக்கப்பட்டுள்ளது
'தாடி வைக்காத பெரியார் தான் நம்ம முதல்வர் ஸ்டாலின்..' பாராட்டித் தள்ளிய சுப வீரபாண்டியன்
மக்கள் கோரிக்கை
அதே நேரத்தில் தமிழக அரசும் வாட் வரியை குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. கேரளா , ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது போல் தமிழத்திலும் திமுக அரசு வாட் வரியையும் பெட்ரோல் வரியையும் குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இதனை செய்ய முடியாது என நிதியமைச்சர் உறுதியாகக் கூறியுள்ள நிலையில் 72 மணி நேரத்திற்குள் கொடுத்த வாக்குறுதி படி பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய் குறைக்க வேண்டும் எனவும், இல்லையேல் கோட்டையை முற்றுகையிட்டு பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கெடு விதித்துள்ளார்.
அண்ணாமலை கெடு
கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " திமுக அரசு செயல் தன்மை இல்லாத அரசு. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்யாமல் உள்ளது. அரசியல் லாபத்திற்காக திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று கூறி உள்ளது. 72 மணி நேரத்திற்குள் கொடுத்த வாக்குறுதி படி பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய் குறைக்க வேண்டும்." வலியுறுத்தி இருந்தார்.
கடும் கண்டனம்
அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு திமுகவினர், அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். விலையை கூட்டிய மத்திய அரசுதான் விலையை குறைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட விலை ஏற்றம் செய்யவில்லை என திமுக அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். மேலும் களநிலவரங்களை அறிந்து அண்ணாமலை பேச வேண்டும் என தமிழக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று பதிலடி கொடுத்தார். இந்நிலையில் திமுகவினர் கெடு விதித்தால், அண்ணாமலை பேசும் கூட்டத்தில் கேட்பதற்கு ஆள் இருக்காது என சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
சுப.வீரபாண்டியன் பேச்சு
நாகை மாவட்டத்தில் நடைபெற்ற திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்," பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தபிழக அரசுக்கு கெடு விதித்து இருக்கிறார், கெடு விதிப்பதெற்கெல்லாம் அவருக்கு உரிமையில்லை , கெடு விதிக்கும் அண்ணாமலைக்கே திமுகவினர் கெடு விதித்தாலோ, அவருக்கு எதிராக கிளர்ந்தெழுந்தாலோ அண்ணாமலை 72 மணி நேரத்தில் மேடையில் பேசுவதற்கு ஆள் இருக்கமாட்டார்கள் ஆனால் அந்த அளவுக்கு ஸ்டாலின் கீழிறங்கமாட்டார். " என்று கூறினார்.