வேளாங்கண்ணி தேவாலயத்தில் அதிகாலையிலேயே குவிந்த ரசிகர்கள்! விஜய் குறித்து தேவாலயம் சொன்னது என்ன?
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, நாகூருக்கு விஜய் வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் வேளாங்கண்ணியில் ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விஜய் வரமாட்டார் என தேவாலய நிர்வாகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தவெக தலைவர் நடிகர் விஜய் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதில் சில நாள்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்ற நடிகர் விஜய் அங்கு வழிபாடு நடத்தினார். இதைத் தொடர்ந்து சீரடிக்கும் சென்று வழிபாடு மேற்கொண்டார்.
இந்நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கும், நாகூருக்கு நடிகர் விஜய் மே 2 ஆம் தேதி அதிகாலை வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியானது. தவெக தலைவர் விஜய் வேளாங்கண்ணி தேவாலயத்திலும், நாகூரில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்காவிலும் வழிபாடு நடத்த இருக்கிறார் என சொல்லப்பட்டது.

மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் விஜய் மும்மதங்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்கிறார் என சொல்லப்பட்டது. அந்த வகையில் வேளாங்கண்ணி கோயிலுக்கு விஜய் வருவதாக தகவல் வெளியான நிலையில் இன்று அதிகாலை 3 மணி முதல் தவெக தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்தனர்.
வேளாங்கண்ணி கோயிலை சுற்றி ஆரவாரத்துடன் சூழ்ந்தனர். நேரமாக ஆக விஜய் வராததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனாலும் அவர்கள் யாரும் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து தேவாலய நிர்வாகம், விஜய் வரவில்லை.

வழக்கமாக வரும் பக்தர்களை தவிர தவெகவினர் யாரும் தேவாலயத்திற்கு வரவில்லை. எனவே திருப்பலிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் பக்தர்கள் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனிடையே
விஜய் வருகை ரத்து செய்யப்பட்டு வேறொரு நாளுக்கு நிகழ்ச்சி மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகாலை வேளாங்கண்ணியில் விஜய் பிரார்த்தனை செய்கிறார் என சொல்லப்பட்ட நிலையில் அவரது வருகை திடீர் ரத்தாகியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. அங்கும் தவெக தொண்டர்கள் டிவிகே டிவிகே என கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தின் முக்கிய ஆன்மிகத் தலங்களான வேளாங்கண்ணி மற்றும் நாகூரில், விஜய்யின் வருகையை அறிந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரள வாய்ப்புள்ளது. இது பொதுமக்களுக்கு இடையூறையும், கூட்ட நெரிசலையும் ஏற்படுத்தும் என்பதால் பாதுகாப்பு கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால், த.வெ.க தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தச் சூழலில் பொது இடங்களுக்குச் செல்வது தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவும் இந்த திடீர் ரத்து பார்க்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications