நாகையில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. ஓஎஸ் மணியன் எம்எல்ஏ மீது கலெக்டரிடம் திமுக நிர்வாகி புகார்
நாகப்பட்டினம் மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாரிபாலன் தலைமையில் சிலர் மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் ஓ.எஸ்.மணியன் எம்எல்ஏ மீது புகார் அளித்தனர். தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓரடியம்புலத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக அதிமுகவைச் சேர்ந்த ஓ.எஸ்.மணியன் எம்எல்ஏ மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்து விரிவாக பார்ப்போம்.
நாகப்பட்டினம் மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாரிபாலன் தலைமையில் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாரிபாலன் தரப்பினர் கூறுகையில், "நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓரடியம்புலத்தில் கடந்த 1995-ம் ஆண்டு அரசு சார்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கடந்த 2017-ம் ஆண்டு வரை பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்தது.
இந்த சமுதாய கூடத்தை 2017-ம் ஆண்டு வேதாரண்யம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்த நாகை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஓ.எஸ்.மணியன் இடித்து விட்டு இடத்தை சுற்றி நான்கு புறமும் கம்பிவேலி அமைத்து அதில் தனது மாட்டு கொட்டகை மற்றும் வைக்கோல்போர் வைத்து இருந்தார்.
இது குறித்து அப்போது புகார் அளித்த போது மாட்டுகொட்டகையும், வைக்கோல் போரையும் அப்புறப்படுத்தி கொண்டு தற்போது அந்த இடத்தில் சாகுபடி செய்து கிரில் கேட் அமைத்து அதை பூட்டி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இது குறித்து பலரும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே இதை நாகப்பட்டினம் கலெக்டர், கவனத்தில் எடுத்து அந்த இடத்தை மீட்டு அரசுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
அந்த இடத்தை இத்தனை ஆண்டு காலம் பயன்படுத்தி ஆதாயம் அடைந்ததற்காக வருவாய்த்துறை மூலம் அபராதம் விதித்து அந்த தொகையை உடனே வசூல் செய்ய வேண்டும். இதேபோல குளத்தை மணல் கொட்டி நிரப்பி ஆக்கிரமிப்பு செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இந்த 2 இடங்களையும் மீட்க வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications