கறிக்கடைக்குள் நுழைந்த நாகை பூங்கொடி.. செம கோபம்.. கையில் "தலையுடன்" வந்ததுமே.. மலைத்த நாகப்பட்டினம்
நாகை: நாகப்பட்டினத்தில் பூங்கொடி என்ற பெண் கையில் "தலையுடன்" கிளம்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிருக்கிறார்.. இந்த காட்சிதான் இணையத்தில் வீடியோவாக வெளிவந்து வைரலாகி கொண்டிருக்கிறது.. கறிக்கடைக்காரருடன் பூங்கொடிக்கு அப்படியென்ன பிரச்சனை ஏற்பட்டது? கசாப்பு கடைக்காரர் மீது பூங்கொடி சொன்ன புகார் என்ன?
கடந்த மாதம் தேனி மாவட்டத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்தது.. பழனிச்செட்டிப்பட்டியில் கறிக்கடை வைத்து நடத்தி வருபவர் மணியரசன். இவரது கறிக்கடைக்கு சுடுகாட்டில் வேலை பார்க்கும் குமார் என்பவர் வழக்கமாக கறி வாங்கி செல்வார். ரெகுலர் கஸ்டமர் என்பதால், சிலசமயம் இலவசமாகவும் அடிக்கடி கறி வாங்கி செல்வாராம்.

ஓசி கறி கேட்ட நண்பன்
அந்தவகையில், சம்பவத்தன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மட்டன் கடைக்கு சென்று ஓசி கறி கேட்டுள்ளார்.. ஆனால், காலையிலேயே கூட்டம் இருந்ததால், இலவச கறியை உடனே தர முடியாது என்று மணியரசன் சொல்லி உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த குமார், உடனே கறி வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார்.
அதற்கு மணியரசன் மறுக்கவும், உடனே சுடுகாட்டுக்கு சென்று, அங்கே புதைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணின் சடலத்தை எடுத்து வந்து கடையின் முன்பு போட்டுவிட்டு ஓடிவிட்டார். அந்த சடலத்தை பார்த்ததுமே கடைக்குவந்த மொத்த பேரும் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.. பிறகு இது தொடர்பாக மணியரசன் போலீசில் புகார் தந்தார்.. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை தந்திருந்தது.
நாகப்பட்டினம் பூங்கொடி
இந்நிலையில், நாகப்பட்டினத்தில் ஒரு சலசலப்பு நடந்துள்ளது.. இங்குள்ள வடக்கு பொய்கைநல்லூரை சேர்ந்தவர் பூங்கொடி.. இவருக்கு 31 வயதாகிறது.. ஆடுகளை வளர்த்து அதில் பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பூங்கொடி வளர்த்துவந்த ஆடுகளில் ஒன்று காணாமல் போய்விட்டது.. இதனால் பதறிப்போன பூங்கொடி, காணாமல் போன தன்னுடைய ஆட்டை பல்வேறு இடங்களில் தேடியலைந்தார்.. எங்குமே ஆடு கிடைக்கவில்லை.. ஒருவேளை கறிக்கடைகளில் யாராவது, ஆட்டை பிடித்து அறுத்து விட்டார்களா? என்ற பதற்றத்தில், கறிக்கடைகளில் தேடிப்பார்த்தார்.
தலை வேறு, முண்டம் வேறு
அந்தவகையில், கல்லார் பகுதியிலுள்ள ஒரு கறிக்கடைக்கு சென்று பார்த்தபோது, அங்கு பூங்கொடியின் ஆடு வெட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்தார்.. தலை தனியாகவும், முண்டம் தனியாகவும் விழுந்து கிடந்ததை கண்டு கொந்தளித்து போன பூங்கொடி, இதுகுறித்து, கறிக்கடைக்காரர்அகமதுவிடம் கேள்வி எழுப்பினார்.. இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு வெடித்தது.
வெட்டப்பட்ட தன்னுடைய ஆட்டின் தலையையும், உடலையும் தந்துவிடுமாறு பூங்கொடி கேட்டும், அகமது தரவில்லை.. அத்துடன் பூங்கொடியையும் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
ஆட்டுத்தலையுடன் கிளம்பிய பூங்கொடி
இதனால் ஆவேசம் அடைந்த பூங்கொடி, ஆட்டின் தலையை மட்டும் எடுத்துக் கொண்டு, நாகை டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். கையில் ஆட்டுத்தலையுடன் ஆவேசத்துடன் வந்துநின்ற பூங்கொடியை பார்த்ததுமே, போலீசாருக்கு தூக்கி வாரிப்போட்டது. முதலில் அது யாருடைய தலை என்று போலீசாருக்கு கிறுகிறுத்துவிட்டது. பிறகுதான், ஆட்டின் தலை என்பது தெரியவந்தது..
அதாவது, இறந்துபோனது தன்னுடைய ஆடுதான் என்பதை அடையாளம் காட்டுவதற்காக அந்த ஆட்டின் தலையை கையோடு கொண்டு சென்றிருக்கிறார்.. இதற்கு பிறகு கறிக்கடைக்காரர் அகமது மீது பூங்கொடி புகார் தரவும், அந்த புகாரின் பேரில், கறிக்கடைக்காரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் அகமதுவை போலீசார் கைது செய்தனர். ஆட்டு தலையுடன் பூங்கொடி தெருவில் நடந்து சென்றதுதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications