மழையெல்லாம் முடிந்தது.. ஆனாலும் நாளை நாகப்பட்டினத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை! காரணம் இதுதான்
நாகப்பட்டினம்: வங்கக்கடலில் உருவாகியிருந்த டிட்வா புயல், வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழையை கொடுத்திருக்கிறது. தற்போது புயல் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆந்திரா பக்கம் நகர்ந்துள்ளது. எனவே நாளை முதல் மழை குறையும். இருப்பினும் நாளை நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையை ஒட்டிய வங்கக்கடலில் உருவாகியிருந்த டிட்வா புயல் தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை போன்ற வட கடலோர மாவட்டங்களை நெருங்கும் என்று வானிலை மையம் கணித்திருந்தது. அதேபோல இலங்கையை கடந்து நேற்று புயல் தமிழ்நாட்டை நெருங்கியது. முன்னதாக இலங்கையில் இந்த புயல் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. புயல் காரணமாக பெய்த கனமழையில் சிக்கி 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 170க்கும் அதிகமானோரை காணவில்லை.

இதனையடுத்து நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை புயல் தமிழக கடல் பகுதியை அடைந்தது. இருப்பினும் புயல் வலுவை இழக்க தொடங்கியது. பலத்த காற்று இல்லை. ஆனாலும் கனமழை பெய்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில் வேளாண் நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 50,000 ஏக்கர் வேளாண் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. நீர் வடிந்த பின்னர்தான் பாதிப்புகள் முழுமையாக தெரிய வரும்.
மழை காரணமாக கடந்த சனிக்கிழமை டெல்டா மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல நாளை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திலும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாளை நாகூர் தர்காவில் 469வது கந்தூரி விழா நடைபெறுகிறது. எனவே நாளை நாகையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல கந்தூரி விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர், விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு இருக்கின்றன.
இன்று காலை சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் ஒன்று வேளாங்கண்ணிக்கு நாகப்பட்டினம் வழியாக இயக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் நாளை காலை வேளாங்கண்ணியில் இருந்து 7.30 மணிக்கு புறப்பட்டு மாலை 3.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், பேரளம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் என பல நிறுத்தங்களின் நிறுத்தப்பட்டு இறுதியாக எழும்பூர் வந்து சேர்கிறது.












Click it and Unblock the Notifications