நடுக்கடலில் இலங்கை கடற்படை அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 12 பேர் கைது
நாகப்பட்டினம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து ஒரு விசைப்படகை பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இலங்கை கடற்படையால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

நம் நாட்டு எல்லைக்குள் மீன்பிடித்தாலும் கூட எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.
மேலும் நடுக்கடலில் மீன்பிடிக்கும்போது அங்கு வரும் இலங்கை கடற்படையினர் மீனவர்களை துன்புறுத்துவதோடு, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக உள்ளது. சில நேரங்களில் துப்பாக்கிச்சூடும் நடத்தி மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்களும், தமிழக அரசும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணவில்லை. இந்நிலையில் தான் தற்போது நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் நெடுந்தீவு அருகே விசைப்படகில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்தததாக கூறி நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்து சென்றனர்.
கைதான மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மீனவர்களை மீட்டு தமிழகம் அழைத்து வர வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications