TN Election Polls: ஓட்டு மெஷினில் “ஸ்டார்ட்டிங் ட்ரபுள்”.. பல இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது!
சென்னை: வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சென்னை, திண்டுக்கல், திருச்சி, வேலூர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்ட நிலையில், அவற்றை சரி செய்து அதிகாரிகள் வாக்குப்பதிவை தொடங்கி உள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 68, 321 வாக்குச்சாவடிகளுக்கு அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 10. 92 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கின்றனர்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அதற்கு முன்னதாக மாதிரி வாக்குப்பதிவு 6 மணியளவில் தொடங்கியது. அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர வேலை செய்கிறதா என்பதை சரிபார்ப்பதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சுமார் 50 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. பின்னர், அந்த வாக்குகள் அழிக்கப்பட்டு, 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
நாகை கல்லுகாரத் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 153ஆம் எண் வாக்குச்சாவடியில் உள்ள வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மாதிரி வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மாற்று இயந்திரம் மூலம் அங்கு மாதிரி வாக்குப்பதிவு தொடங்கி, அதன்பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது.
திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரம் அகற்றப்பட்டு புதிய வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் கானைக்குப்பம் வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரம் கோளாறால் வாக்குப் பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதேபோல, ஈரோடு நாகவாம்பாளையம் வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டு 30 நிமிடம் தாமதமாக வாக்கு பதிவு தொடங்கியது.
திண்டுக்கல் 18வது வார்டில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்கு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காந்தி நகரில் வாக்கு இயந்திரம் செயல்படாததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
அதேபோல, நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் வாக்களிக்கும் மத்திய சென்னை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இ.வி.எம் இயந்திரத்தில் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. நடிகர் கௌதம் கார்த்திக் உள்ளிட்ட வாக்காளர்கள் பலர் அங்கு காத்திருந்தனர்.
அதன்பிறகு, அங்கு வாக்கு இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு, வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துச் சென்றார்.












Click it and Unblock the Notifications