நாகையில் கொட்டும் மழை... களத்தில் இறங்கிய தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.
நாகை: நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி.
நாகை மற்றும் நாகூர் பகுதிகளுக்கு இன்று சென்ற தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியை ஆய்வு செய்ததோடு தேங்கி நின்ற மழைநீரை அகற்றவும் நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும், சாரல் மழையில் நனைந்துகொண்டே சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இன்னும் 10 நாட்களில் தமது கட்சி நிதியில் இருந்து மழைகோட் வாங்கித் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
நாகையில் அடைமழை
நாகை மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக இடை விடாது அடைமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதுடன் ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. இதனை சீரமைக்கும் பணி சாரல் மழைக்கும் மத்தியில் மேற்கொள்ளப்படுகிறது.
பல ஊர்களில் வெள்ளம்.. நிரம்பிய வழியும் ஆறுகள்.. திறந்து விடப்படும் தண்ணீர்.. மக்களுக்கு எச்சரிக்கை!
ஊழியர்கள் உற்சாகம்
துப்புரவு உள்ளிட்ட சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை சந்தித்து பேசிய நாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி, அவர்களை பாராட்டியதோடு நன்றியும் தெரிவித்தார். அப்போது தங்களுக்கு மழை கோட் கொடுத்தால் உதவியாக இருக்கும் என அந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நடவடிக்கை
இந்நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., இன்னும் 10 நாட்களுக்குள் தனது கட்சி நிதியில் இருந்து துப்புரவு ஊழியர்களுக்கு மழை கோட் வழங்கப்படும் என உடனடியாக உறுதியளித்தார். இதைக்கேட்ட நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
விழாக்கள் தவிர்ப்பு
மேலும், தாம் இன்று செல்லவிருந்த பல்வேறு திருமண விழாக்களை தவிர்த்த தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தொடர்ந்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.