கூட்டணியில் பாஜக இல்லாததால், அதிமுக பெரிய வெற்றி பெறும்.. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அதிரடி
பாஜக எங்களோடு இல்லாததால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றியை சந்திக்கும் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கூறியுள்ளார்
நாகை : ஹிஜாப் அணிவது இஸ்லாமியர்களின் கலாச்சாரம்; அதில் தலையிடுவது மதக்கலவரத்தை தூண்டும் செயல் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கூறியுள்ளார். பாஜக எங்களோடு இல்லாததால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றியை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருக்குர்ஆனில் ஹிஜாப் அணிய கூறப்பட்டுள்ளது! சீருடையை தவிர்க்கவில்லையே: ஹைகோர்ட்டில் அனல்பறந்த வாதம்
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி மாநிலம் முழுவதும் நேரடித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மேயர்கள், நகராட்சிக் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மறைமுகத்தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
வேட்புமனு தாக்கல் முடிந்து விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவில் அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வழிபாடு நடத்தினார். அங்குள்ள ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கிய அவர், நாகூர் தர்கா அலங்கார வாசல் உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தகர்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்மகன் உசேன், இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவோடு பாஜக கூட்டணியில் இல்லாதது எங்களுக்கு நன்மையைத் தரும் என்றாத். பாஜக எங்களோடு கூட்டணியில் இல்லாத காரணத்தால் உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இஸ்லாமியர்களின் கலாச்சாரப்படி பெண்கள் ஹிஜாப் அணிவது எங்கள் நிலைப்பாடு. அதில் யாரும் குறுக்கிட முடியாது என்றார். ஹிஜாப் அணிவது தேவைக்கோ, இஷ்டத்துக்கோ போடுவது கிடையாது அது இஸ்லாமியர்களின் கலாச்சாரம் என்று தெரிவித்தார். இந்த கலாச்சாரத்தில் யாரும் தலையிடக்கூடாது என்று கேட்டுக் கொண்ட தமிழ்மகன் உசேன், அப்படி தலையிட்டால் அது மதக்கலவரத்தை தூண்டுவதற்கு தான் என்று குற்றம் சாட்டினார்.