வேளாங்கண்ணி பேராலய திருவிழா தேர் பவனி.. கொட்டும் மழையில் பக்தர்கள் பிரார்த்தனை!
நாகப்பட்டினம்: உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை மேற்கொண்டனர்.
கீழ்திரை நாடுகளில் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுப்பெருவிழா, ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி தொடங்கி, 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக, பக்தர்களின்றி எளிய முறையில் நடைபெற்றது.

தேர் பவனி
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றப்பட்டு, வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் சிறப்பாக நடைபெற்ற இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி, தஞ்சை மறை மாவட்ட ஆயடர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கொட்டும் மழையில் பக்தர்கள்
இதனையடுத்து, பேராலய முகப்பில் இருந்து உத்திரிய மாதா, புனித அந்தோணியார் உடட்பட சிறிய தேர்கள் முன்னே வர, பெரிய சப்பரத்தில் புனித ஆரோக்கிய மாதா அன்னையின் தேரை, பக்தர்கள் சுமந்து வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் ஊர்வலமாகச் சென்றபோது, திடீரென மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி முழக்கத்துடன், மாதா தேர் மீது மலர்களை தூவி பிரார்த்தனை மேற்கொண்டனர்.

வேளாங்கண்ணி மாதா பிறந்த நாள்
வேளாங்கண்ணி மாதாவின் பிறந்த நாளான இன்று காலை, பேராலயத்தில் கூட்டுப்பாடல், மற்றும் திருப்பலிகள் நடைபெற்றன. இன்று மாலை 6.30 மணிக்கு, புனித மரியாளின் திருவுருவம் பதித்த கொடி இறக்கப்பட்டு, வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா நிறைவு பெறுகிறது. இந்த பெருவிழாவுக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர்.

இன்று உள்ளூர் விடுமுறை
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணியில், ஆண்டு பெருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications