கடும் வறட்சி... மழை வேண்டி நாகையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
நாகை: மழை வேண்டி நாகையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போதிய மழை இல்லாமல் மிகவும் வறட்சியாக காணப்படுகிறது. மழை இல்லாததால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். நீர்நிலைகள் வறண்டு போய் உள்ளன. பல கிராமங்களில் குடிக்க குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்க்க முடியாத நிலையில் உள்ளனர்.

இதையடுத்து, தமிழக அறநிலையத்துறை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும், மழை வேண்டி யாகம் நடத்த உத்தரவிட்டது. அதன்படி, மழை பெய்து வறட்சி நீங்க வேண்டி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் இசை வாத்தியங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தற்போது, அதிமுக சார்பில், கோவில்களில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தநிலையில், மழை வேண்டி நாகையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். நாகூர் கடற்கரையில் திரண்ட இஸ்லாமியர்கள், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு தொழுகை நடத்தினர். இதில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ஜமாஅத் உலமா சார்பில் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள மைதானத்தில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர். அப்போது நல்ல மழை பொழிய வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மக்கள் அனைவரும் நலமாக வாழவும் வேண்டி சிறப்புத் தொழுகையில் பெரம்பலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications