பாஜக ஆலோசனை சொல்லலாம்.. அதிகாரமாக சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.. புகழேந்தி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஏற்று நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.
நாகர்கோவில்: ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கைகள் இருக்கிறது. பாஜகவை பொருத்தமட்டில் ஆலோசனை சொல்லலாம். அதிகாரமாக சொல்ல முடியாது என்று ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தும் எதுவும் இல்லை.
செந்தில் முருகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி.. 'கைம்மாறு’ செய்யும் ஓபிஎஸ்.. அப்போ கன்ஃபார்மா?
எடப்பாடி ஒத்துவரவில்லை
உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சை சேர்த்துக்கொண்டு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஏற்கனவே ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். பொதுமக்களின் கருத்தும் அதுவாகவே இருக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒத்துவரவில்லை. உச்ச நீதிமன்றம் தற்போது கூறியிருப்பதால் அவர்களுக்கு வேறு வழியில்லை.
எடப்பாடி துரோகம் செய்துள்ளார்
எடப்பாடி பழனிசாமி அணியினர் சார்பில் தென்னரசு வேட்பளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். உச்ச நீதிமன்றம் அப்படித்தான் செய்ய வேண்டும் சென்று கூறினால் வேறு வழி கிடையாது. ஓபிஎஸ் உடன் ஆலோசித்து முடிவெடுக்கும் பட்சத்தில் அவரது சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் வாபஸ் பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும். சசிகலாவிற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளார். ஏற்கனவே நடந்து முடிந்த பேரூராட்சி, மாநகராட்சி தேர்தலில் அதிமுக மிகப்பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இதற்கு எடப்பாடிதான் முழு பொறுப்பு.
பாஜக மீது மரியாதை தான் உள்ளது
அதிமுகவில் பாஜக தலையிட கூடிய சூழ்நிலை இருப்பதாக கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். கொள்கை ரீதியாக யாரை பார்த்தும் எங்களுக்கு பயமில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் அப்போதே சொல்லிவிட்டார். பாஜக மீது மரியாதை தான் உள்ளது. யாருக்கும் நாங்கள் அடிமைகள் இல்லை என்பதை நான் பதிவு செய்கிறேன். பாஜக எங்களை வழிநடத்தவில்லை. பாஜக இங்கு நடித்துக் கொண்டு இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி இருந்தால் எதற்காக உச்ச நீதிமன்றத்துக்கு போக வேண்டும்.
அதிகாரமாக சொல்ல முடியாது
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கைகள் இருக்கிறது. பாஜகவை பொருத்தமட்டில்ஆலோசனை சொல்லலாம். அதிகாரமாக சொல்ல முடியாது. முதல்வர் ஆவதற்காக பாஜக சொன்னது எடப்பாடி பழனிசாமிக்கு தேவைப்பட்டது. ஆனால் தற்போது பொன்னையன் பேசுவதை வேடிக்கை பார்ப்பது எடப்பாடி பழனிசாமியின் வழக்கமாக இருக்கலாம்.
பேனாவை வைத்து தான் அடையாளமா?
திராவிட இயக்கத்திற்கு 55 ஆண்டு கால வரலாறு உள்ளது. பேனாவை வைத்துத்தான் கலைஞரை அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. எல்லோருக்கும் கலைஞரை தெரியும். கலைஞரின் எழுத்துக்கு என்று தனி மரியாதை இருக்கிறது. பேனாவை வைத்து தான் கலைஞரை அடையாளம் காட்ட வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு புகழேந்தி கூறினார்.