வீட்டில் ரகசிய கேமரா.. தம்பதியின் படுக்கை அறை காட்சிகள் வெளியீடு.. கன்னியாகுமரியில் பரபரப்பு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் வீட்டில் ரகசிய கேமரா வைத்து தம்பதியின் படுக்கை அறை காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்ட கும்பல் குறித்து எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
படுக்கை அறை காட்சிகளை ரகசிய கேமரா வைத்து படம் பிடித்து அதை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது ஒரு கும்பல். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. வீட்டிற்குள் அவர்களுக்கே தெரியாமல் சிறிய கேமராவை வைத்து இந்த மோசமான செயலை அரங்கேற்றி உள்ளனர்.

இதுபற்றி கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த தம்பதி புகார் அளித்துள்ளனர். நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் அவர் கூறுகையில், " எங்களுக்கு 6 வருடங்கள் முன்பு திருமணம் நடந்தது. நாங்கள் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கிராமத்தில் வசிக்கிறோம். எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பம். எங்களது படுக்கை அறை காட்சி வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.
எப்படி படுக்கை அறை காட்சிகள் வெளியே வந்தது என்று வீடு முழுவதும் சோதனை செய்தோம். படுக்கை அறையின் மேல் பகுதியில் போடப்பட்டிருந்த இடைவெளியில் ஒரு சிறிய கேமரா இருந்ததை கண்டுபிடித்தோம். அந்த கேமராவை வைத்துதான் படம் பிடித்துள்ளார்கள்.

இதன்மூலம் மர்ம கும்பல் எங்கள் படுக்கை அறை காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பி உள்ளனர். இதுதொடர்பாக எங்களுக்கு சில நபர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இத்தகைய அநாகரிகமற்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட கும்பலை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அந்த வீடியோக்கள் மேலும் பரவாமல் தடுத்து அழிக்க வேண்டும்" இவ்வாறு அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.
இந்த தம்பதிகளிடம் விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications