"Grandson of MLA.." செருப்பே போடாத எம்எல்ஏ காந்தி பெயரை கெடுக்கும் அம்ரிஷ்.. அதிர்ந்த நாகர்கோவில்
நாகர்கோவில்: 'கிராண்ட் சன் ஆப் நாகர்கோவில் எம்.எல்.ஏ' என்று, நம்பர் ப்ளேட்டுக்கு பதிலாக விலை உயர்ந்த பைக்கில் வாசகத்தை அச்சிட்டு வண்டியில் ஒட்டிக் கொண்டு இருக்கிறார் அம்ரிஷ்.
இந்த வண்டியின் புகைப்படங்கள் அனைத்தும் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. நம்பர் ப்ளேட் இருக்க வேண்டிய இடத்தில், அதிகாரத்தைக் காட்டும் வகையில் எம்.எல்.ஏவின் உறவினர் என்று எழுதி இருக்கிறார் அம்ரிஷ்.
வைரல் போட்டோ
'கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்.எல்.ஏ ஸ்ரீ எம்.ஆர்.காந்தி' என்ற ஆங்கில வாசகம் எழுதப்பட்ட பைக்கின் புகைப்படத்தை தன்னுடைய முகநூலில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பதிவிட்டிருந்தார் அம்ரிஷ். அது தற்போது வைரலாகி வருகிறது. மேலும், தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் அரங்கில் ''நெருப்பு பேரோட நீ குடுத்த ஸ்டாரோட'' என்ற ரஜினி பாடல் ஒலிக்க இரண்டு போலீசாருடன் அவர் நடந்து வரும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இதையும் கட்டிங்-ஒட்டிங் செய்து கலக்கலாக ரெடி செய்து இப்படி சுற்றலில் விட்டுள்ளார் அவர்.
யார் இந்த அம்ரிஷ்
நாகர்கோவில் எம்.எல்.ஏ காந்தியின் பேரன் என்று எழுதி இருக்கிறார். ஆனால் காந்தி தன்னுடைய கொள்கைக்காக திருமணமே செய்து கொள்ளாதவர். அப்படி இருக்கும்போது அம்ரிஷ் காந்தியை தாத்தா என கூறுகிறாரே என விசாரித்ததில், '' நாகர்கோவில் எம்.எல்.ஏ-வாக இருக்கும் எம்.ஆர்.காந்தி-யின் உதவியாளராக இருக்கும் கண்ணனின் மகன்தான் அம்ரிஷ் எனத் தெரியவந்தது.
அம்ரிஷ் 'பி.ஜே.பி'
எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ ஆனதும், டிரைவராக இருந்த கண்ணன், காந்தியின் உதவியாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். கண்ணனுக்கு இரண்டு மகன்கள் அதில் அம்ரிஷ் என்பவர் 'அம்ரிஷ் பி.ஜே.பி' என்ற முகநூல் பக்கத்தில் பதிவிட்ட போட்டோதான் தற்போது வைரலாகியுள்ளது. நம்பர் பிளேட்டுக்கு பதிலாக 'கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்.எல்.எம்.ஆர்.காந்தி' என எழுதிய பைக்கை சாலையில் ஓட்டுவது விதிகளுக்கு எதிரானது என சமூகவலைதளத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காந்தி
பாஜக மூத்த தலைவரான எம்.ஆர்.காந்தி ஆறு முறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு, இந்த முறை தான் சட்டசபைக்குள் நுழைந்திருக்கிறார். காலில் செருப்புகூட போடாமல் கதர் வேட்டி, ஜிப்பா அணிந்து எளிமையாக வாழ்ந்து வருகிறார். எம்.ஆர்.காந்தி கட்சி பணிகள் செய்வதற்காக திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார். இவருடைய பெயரைப் பயன்படுத்தி, தான் அதிகார வர்கத்தோடு தொடர்புடையவர் என தெரிவிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார் அம்ரிஷ். அந்த வண்டியில் வழக்கறிஞர் ஸ்டிக்கரும் ஒட்டி இருக்கிறார். இதையடுத்து, வக்கீலுக்கு படித்துவிட்டு சட்டத்தையே மதிக்காமல் இருப்பதாகவும் நெட்டிசன்கள் அம்ரீஷை வறுத்தெடுத்து வருகிறார்கள்.