அந்தரத்தில் தொங்கும் தண்டவாளங்கள்! நாகர்கோவில் டூ பெங்களூர் (17236) விரைவு ரயில் இன்று ரத்து
நாகர்கோவில்: ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை புரட்டி எடுத்து வரும் நிலையில் நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலின் எண் 17236 ஆகும்.
ஆந்திரா, தெலுங்கானாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து கர்நாடகாவிலும் நீர் நிலைகள் நிரம்பி ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகர்கோவிலிலிருந்து பெங்களூர் செல்லும் விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 17236 நாகர்கோவில் டூ எஸ்எம்விடி பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ரத்தாகியுள்ளது. இந்த ரயில் நெல்லை வழியாக பெங்களூர் செல்கிறது. நாகர்கோவில், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், தருமபுரி, ஓசூர், பெங்களூர் என 13 நிறுத்தங்களை இந்த ரயில் கொண்டுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக தென் மத்திய ரயில்வே 21 ரயில்களை ரத்து செய்துள்ளது. பல இடங்களில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதாலும் தண்ணீர் தேங்கியுள்ளதாலும் மேலும் 10 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட 21 ரயில்கள் சென்னை சென்ட்ரல் - சாப்ரா விரைவு ரயில், சாப்ரா-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-புதுடெல்லி, புதுடெல்லி - சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென் மத்திய ரயில்வே (எஸ்சிஆர்) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் கம்மம் மாவட்டம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அவசர சேவைகளை வழங்க ஹெலிகாப்டர்கள் அனுப்பப்படும் என்றும் தேவையான உதவிகளையும் நிவாரணங்களையும் மத்திய அரசு வழங்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி வருகிறது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக இந்த மழை கொட்டி வருகிறது. இதனால் ஆந்திராவின் கிருஷ்ணா, புடமேரு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆந்திராவில் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய தலைநகரான அமராவதி அப்படியே வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
அது போல் விஜயவாடாவும் வெள்ளத்தில் தவித்து வருகிறது. இந்த கனமழை, பெருவெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 31 பேர் பலியாகிவிட்டனர்.
காணாமல் போனவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். ஆந்திரா, தெலுங்கானாவில் பல இடங்களில் வெள்ளத்தால் தண்டவாளத்தில் இருந்த ஜல்லிக்கற்கள் அடித்துச் செல்லப்பட்டு அவை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் ஆந்திரா, தெலுங்கானா வழியாக செல்லும் 438 ரயில் சேவைகளை வரும் 6ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் 137 ரயில் சேவைகள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications