நாமக்கலை நடுங்க வைக்கும் சம்பவம்! விஷ ஊசி போட்டு 300 பேர் கருணைக் கொலையா? பரவும் வீடியோவால் அதிர்ச்சி
நாமக்கல்: நாமக்கல்லில் வயது முதிர்ந்து, படுத்த படுக்கையாய் இருக்கும் முதியவர்களுக்கு விஷஊசி செலுத்தி கருணை கொலை செய்யப்படுவதாகவும், இதுவரை 300 பேர் கருணைக்கொலை செய்யப்பட்டதாக பரவும் வீடியோவால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் உண்மையா என்று அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ரூ.5 ஆயிரம் கொடுத்தால் வயது முதிர்ந்து, படுத்த படுக்கையாய் இருக்கும் முதியவர்களுக்கு விஷஊசி செலுத்தி கருணை கொலை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுவரை 300 பேர் வரை கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் கேள்வி கேட்க, இன்னொருவர் பதில் சொல்லும் விதமாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த அதிகாரிகள் தீவிர விசாரணயில் இறங்கி உள்ளனர். அந்த வீடியோவில் என்ன இருக்கிறது? சம்பந்தப்பட்ட வீடியோவில் பேசும் நபர், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளதும், அவர் தனியார் ஆம்புலன்சில் கிளீனராக வேலைப் பார்த்து வருவதும் தெரிகிறது.
அவரிடம், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன் விசாரணை நடத்தினார். அப்போது அந்த நபர், விபத்தில் காயம் அடைந்தவர்களையும், இறந்தவர்களையும் தூக்கி வந்திருக்கிறார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பள்ளிபாளையம் போலீசாரும், குறிப்பிட்ட ஆம்புலன்ஸ் கிளீனர் மோகன்ராஜ் (வயது52) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த நபர் மாடுகளில் ஒட்டுண்ணியை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஆபத்தான ஒரு பொருளை வைத்திருந்ததும், அதனை தனியார் மருந்து கடையில் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் மோகன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளார்கள்.
இதற்கிடையே அவரிடம் போலீசார் விசாரித்தபோது, அந்த நபர் மதுபோதையில் தவறாக பேசியதாக கூறியிருக்கிறார். இருந்தாலும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். பள்ளிபாளையம் பகுதியில் வயது முதிர்ந்து, படுத்த படுக்கையாய் உள்ளவர்களை கவனிக்க முடியாமல் உள்ளவர்கள் கருணைக்கொலை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி மோகன்ராஜ் என்பவர் பேசும் வீடியோ பரவி வருவது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக புகார்கள் இதுவரை பதிவாகவில்லை. இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், விசாரணை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications