நாமக்கல் நடிகர் குமாரராஜன் தற்கொலை செய்து கொள்ளவில்லை.. குடும்பத்தினர் தகவல்!
நாமக்கல்: நடிகர் குமாரராஜன் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என அவரது குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர்.
நாமக்கல்லில் இருக்கும் கங்கா நகரைச் சேர்ந்தவர் குமாரராஜன் (39). சந்திப்போம் சிந்திப்போம் என்ற படத்தில் துணை நடிகராக நடித்தவர் குமாரராஜன்.
இவர் தனது குடும்பத்தினருடன் நாமக்கல்லில் வசித்து வந்தார். தன் வேலை தான் நினைத்தபடி இல்லையே என்ற கவலை அவருக்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.
வீட்டில் தற்கொலை
இதனால் அவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. மது விவகாரம் தொடர்பாக குமாரராஜனுக்கும் அவரது மனைவி சிந்துஜாவுக்கும் (35) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தகவல் வெளியானது.
குடும்பத்தினர்
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர். அதில் குமாரராஜன் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர் மாரடைப்பால் மட்டுமே இறந்தார். உண்மை நிலை தெரியாமல் பேச வேண்டாம் என குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
கொட்டாச்சி
பாலு ஆனந்த், கஞ்சா கருப்பு, கொட்டாச்சி, கிங்காங் ஆகியோருடன் சந்திப்போம் சிந்திப்போம் படத்தில் காமெடியில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் குமாரராஜன். இதையடுத்து துப்பார்க்கு துப்பாய, ரெண்டுல ஒண்ணு ஆகிய படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமானார்.
கண்ணீர் மல்க
இந்த நிலையில் குமாரராஜன் இறந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறந்த காமெடி நடிகரையும், தயாரிப்பாளரையும் திரையுலகம் இழந்துவிட்டதாக அவருடன் நடித்தவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.