ஆச்சரியம் தரப்போகும் பேட்டரி பஸ்கள்.. அதைவிடுங்க.. வாகனங்களின் உதிரி பாகங்களின் விலையும் உயர்கிறதா?
நாமக்கல்: மோட்டார் வாகனங்களுக்கான வரிகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வாகனங்களின் உதிரி பாகங்கள் விலை உயர்த்தப்படாது என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான சட்ட மசோதா, நேற்று தமிழக சட்டசபையில் நிறைவேறியது.

அதன்படி, சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், 'கேப்'கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரியை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பைக்குகள்: குறிப்பாக படுக்கையுடன் கூடிய ஆம்னி பஸ்களுக்கு 4,000 ரூபாய் வரை வரியும், புதிய இருசக்கர வாகனங்களுக்கான வாழ்நாள் வரி 12 சதவீதம் வரையும், புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி, இருசக்கர வாகனங்களுக்கு 375 ரூபாய், இலகுரக வாகனங்களுக்கு 2,250 ரூபாய் மற்ற வாகனங்களுக்கு 3,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாமக்கல்லில் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க பதவியேற்பு விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
லாரி ஓனர்கள்: "லாரி உரிமையாளர்கள் தெரிவித்த ஸ்டிக்கர் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழக்குகள் தொடர்பாக லாரி உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையின்பேரில் காவல்துறை தலைவரிடம் நடவடிக்கை மேற்கொள்ளும்படி தெரிவித்தேன். அதன்பின் 25 சதவீதம் அப்பிரச்சினை குறைந்துள்ளது.
சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் இதுகுறித்து காவல் துறை தலைவரிடம் மறுபடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்துள்ளார்.. நம்முடைய பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அளவுக்கு உயர்த்தும் நோக்கில் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது... இந்த புதிய தொழிற்சாலைகள் அமையும்போது, லாரி தொழில் மிகப்பெரிய அளவில் விரிவடைய வாய்ப்புள்ளது.
பைக்குகள்: தமிழகத்தை பொறுத்தவரை, வாகன வரி விதிப்பு என்பது 15 முதல் 23 வருடங்களாக உயர்த்தப்படாமல் இருந்தது. ஒரு பக்கம் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் விலையை உற்பத்தியாளர்கள் உயர்த்தி வருகின்றனர்... இன்னொரு பக்கம், மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திக் கொண்டிருக்கிறது.
இப்போது தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள வரி ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தைக் காட்டிலும் குறைவுதான்.. எனினும், கர்நாடகாவில் வாகன வரி குறைவாக உள்ளதாக கூறப்பட்டது.. எனவே அதில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால், நிச்சயம் முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பேட்டரி பஸ்கள்: தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், "பேட்டரியில் இயங்கும் பேருந்துக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் ஓட்டுநர் உரிமம் சான்று, பதிவுச்சான்று, தகுதிச்சான்று பெறுவது தொடர்பான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மோட்டார் வாகனங்களுக்கான வரி உயர்வு பக்கத்து மாநிலங்களை விட குறைவுதான். 23 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான், அதுவும் குறைவாகத்தான் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களின் உதிரி பாகங்கள் விலை உயர்த்தப்படாது. " என்றார்.
பேட்டரி பஸ்கள்: பேட்டரி பஸ்களுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது பெருத்த மகிழ்ச்சியை பயணிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது. பேட்டரி தொழில்நுட்பத்தால், 50 சதவீதம் எரிபொருள் செலவு குறையும். வரி விலக்கு சலுகையால், ஆண்டுக்கு ஒரு பஸ்சுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லலாம். பேட்டரி பஸ்ஸில், ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டால், கிட்டத்தட்ட 300 கிமீ வரை செல்ல முடியும்" என்று ஏற்கனவே, அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளதால், இந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications