எதிர்பார்க்காத வரவேற்பு; 3 மணி நேரம் வாழ்த்துமழை; நெகிழ்ந்த திமுக ராஜ்யசபா வேட்பாளர் ராஜேஷ்குமார்..!
நாமக்கல்: திமுக ராஜ்யசபா வேட்பாளர் ராஜேஷ்குமாருக்கு அவரது சொந்த ஊரான நாமக்கல்லில், 3,000 -க்கும் மேற்பட்டோர் 3 மணி நேரம் இடைவிடாது நேரில் சந்தித்து வாழ்த்து கூறி அவரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு ராஜ்யசபா இடங்களுக்கு அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து திமுக சார்பில் ராஜேஷ்குமார் மற்றும் கனிமொழி சோமு ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதில் ராஜேஷ்குமார் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ளார். கடந்த 14-ம் தேதி ராஜ்யசபா வேட்பாளராக இவரது பெயர் அறிவிக்கப்பட்ட போது சென்னையில் தான் இருந்தார். இதனால் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அன்று மாலையே நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து சென்னையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டியவர்களுக்கு நன்றி கூறி விட்டு நேற்று சொந்த ஊரான நாமக்கலுக்கு வந்தார். அப்போது அங்கு அவரே எதிர்பார்க்காத வகையில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது.
சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு சென்று ராஜேஷ்குமாருக்கு வரவேற்பு அளித்ததுடன் அப்படியே அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கவும் அவரை அழைத்துச் சென்றனர். அங்கு வந்திருந்த சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., நாமக்கல் எம்.எல்.ஏ. மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரது கரங்களை பற்றியபடி நாமக்கல் மாவட்டத்தில் கோஷ்டி அரசியலே கிடையாது என்பதை திமுக தலைமைக்கு வெளிப்படுத்தினார்.
இதற்கடுத்தபடியாக சுமார் 3 மணி நேரம் இடைவிடாது தொண்டர்களும், நிர்வாகிகளும் ராஜேஷ்குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனிடையே இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் நாமக்கல் மாவட்ட திமுக முன்னோடியுமான காந்திச்செல்வன் கலந்துகொள்ளவில்லை.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் பணம் செலுத்தி, இரண்டில் ஒரு தொகுதியை ராஜேஷ்குமார் எதிர்பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் எதிர்பார்த்தபடி எம்.எல்.ஏ. சீட் கிடைக்கவில்லை. இருப்பினும் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் தனது நிர்வாகத்திற்குட்பட்ட சேந்தமங்கலம், ராசிபுரம், நாமக்கல் ஆகிய மூன்று தொகுதிகளையும் கைப்பற்றிக் கொடுத்து முதலமைச்சர் ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பிடித்தார்.