திருச்செங்கோடு தொகுதி திமுகவுக்கே! கே.என்.நேருவிடம் மன்றாடிய உடன்பிறப்புகள்! கொங்கு ஈஸ்வரன் கதி?
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியை தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கே திமுக தலைமை ஒதுக்கி வரும் நிலையில், அடுத்த சட்டமன்றத் தேர்தலிலாவது திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அமைச்சர் கே.என்.நேருவிடம் ஓபன் மேடையிலேயே திமுக ஒன்றியச் செயலாளர் தங்கவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் மூலம் திருச்செங்கோடு தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரனுக்கு அடுத்த முறை மீண்டும் கொடுக்க கூடாது என்பதை அவர் சூசகமாக இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கின்ற சூழலில் இப்போது அதைப்பற்றி எதற்கு பேசிக் கொண்டு என நினைத்தாரோ தெரியவில்லை, அமைச்சர் நேரு பெரியளவில் ரியாக்ஷன் காட்டவில்லை.

நாமக்கல் மாவட்ட திமுகவை பொறுத்தவரை கிழக்கு, மேற்கு என இரண்டு அமைப்புகளாக உள்ளது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக ராஜேஷ்குமார் எம்.பி.யும், மேற்கு மாவட்ட திமுக செயலாளராக மதுரா செந்திலும் இருக்கிறார்கள். இதில் மதுரா செந்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் தேர்தலின் மூலம் புதிதாக பதவிக்கு வந்தவர்.
ராஜேஷ்குமார், மதுரா செந்தில் ஆகிய இருவருமே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பெற்றிருப்பவர்கள். இந்நிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத் திறப்பு விழா மூன்று நாட்களுக்கு முன்னர் திருச்செங்கோட்டில் நடைபெற்ற நிலையில், அதில் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு கலந்துகொண்டார்.
அப்போது அந்த விழாவில் பேசிய திருச்செங்கோடு திமுக ஒன்றியச் செயலாளர் வட்டூர் தங்கவேல், திருச்செங்கோடு தொகுதியை ஒவ்வொரு தேர்தலின் போதும் கூட்டணிக் கட்சிகளுக்கே தலைமை ஒதுக்குவதாக கவலை தெரிவித்த அவர் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலாவது திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என நேருவிடம் ஓபன் ஸ்டேஜில் கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications