ரவுடிதனம் செய்தால் தப்ப முடியாது... கடும் நடவடிக்கை பாயும்... முதலமைச்சர் எச்சரிக்கை
நாமக்கல்: ரவுடிதனம் செய்தால் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்வதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ரவுடித்தனத்தை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்றும், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

முதல்வர் ஆய்வு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட நிர்வாகப் பணிகள் குறித்து மாவட்டம் தோறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்திற்கு இன்று சென்ற அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நிகழ்ச்சியை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சட்டம் ஒழுங்கு தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் ரவுடித்தனம் ஒடுக்கப்படும் எனக் கூறினார்.

முதல்வர் உறுதி
அதிமுக அரசை பொறுத்தவரை ரவுடிகளை ஒடுக்கும் அரசு என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும் முதலமைச்சர் கூறினார். ஆங்காங்கு நடக்கும் ஒரு சில நிகழ்வுகளை மட்டுமே வைத்து சட்டம் ஒழுங்கை எடை போட்டுவிடக்கூடாது எனக் கேட்டுக்கொண்ட அவர் ஒட்டுமொத்தமாக மாநில அளவில் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

அடக்குவோம்
தமிழகத்தை பொறுத்தவரை ரவுடித்தனம் செய்தால் அது யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டத்தின் வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியை அளித்தார். இதனிடையே ஹெச்.ராஜா ட்வீட் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே பதில் அளித்துவிட்டதாக சுட்டிக்காட்டினார்.

நேரில் ஆய்வு
அதேபோல் இ-பாஸ் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர், இ-பாஸ் கடுமையாக பின்பற்றப்பட்டதால் தான் கொரோனா பரவலின் தாக்கத்தை குறைக்க முடிந்ததாக கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பை முடித்த பிறகு நாமக்கல்லில் கட்டப்பட்டு வரும் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடத்திற்கு சென்று முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.












Click it and Unblock the Notifications