பணமோசடி வழக்கில் இறுகும் பிடி; அதிமுக Ex அமைச்சர் சரோஜா தலைமறைவு?
நாமக்கல்: பண மோசடி வழக்கில் ஜாமின் மனு மீதான விசாரணையை மூன்றாவது முறையாக நாமக்கல் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சரோஜா தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகிய நிலையில் இருப்பதால் அவரும் அவரது கணவரும் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
இதனிடையே முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு ஜாமின் கிடைக்கவிட மாட்டேன் என உறுதியாக கூறுகிறார் அவர் மீது பணமோசடி புகார் கொடுத்த குணசீலன் என்பவர்.

ராசிபுரம் தொகுதி
கடந்த அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் சரோஜா. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த இவர் ஒரு மருத்துவரும் கூட. சமூக நலத்துறையின் கீழ் வரும் சத்துணவு அமைப்பில் வேலை கொடுப்பதாக கூறி 15-க்கும் மேற்பட்டோரிடம் 76 லட்சம் ரூபாய் பணம் வசூலித்துக் கொடுக்கச் சொன்னார் என்றும் ஆனால் பணியையும் கொடுக்காமல் கொடுத்த பணத்தையும் திருப்பிக்கொடுக்காமல் மோசடியில் ஈடுபடுகிறார் எனவும் கடந்த ஆகஸ்ட் மாதம் குணசீலன் என்பவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

ஒத்தி வைப்பு
அதன்பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த கரூர் குற்றப்பிரிவு போலீஸார் சரோஜாவை விசாரணைக்கு அழைத்து வருகின்றனர். ஆனால் ஒரு முறை கூட சரோஜா விசாரணைக்கு ஆஜராகவில்லை. தன் மீதான பணமோசடி வழக்கில் முன் ஜாமின் கோரி நாமக்கல் நீதிமன்றத்தை அவர் நாடிய நிலையில், மூன்று முறை இந்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எப்படியும் நீதிமன்றம் ஜாமின் வழங்கிவிடும் அதற்கு பிறகு விசாரணையை எதிர்கொள்ளலாம் என காத்திருந்த முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

இறுகும் பிடி
முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு முன் ஜாமின் கிடைக்கவில்லை என்பதால் அவர் மீதான காவல்துறையினரின் பிடி இன்னும் இறுகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சரோஜாவும் அவரது கணவரும் தற்போது செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு எங்கிருக்கிறார்கள் என்பது மர்மமாக உள்ளது. அன்று அமைச்சர் என்கிற முறையில் சரோஜாவை பார்த்து சல்யூட் அடித்த அதே போலீஸ் தான், இன்று பணமோசடி வழக்கில் அவரை கைது செய்ய முனைப்பு காட்டி வருகிறது.

கடும் அதிருப்தி
முன் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் முன்னாள் அமைச்சர் சரோஜா பணமோசடி வழக்கில் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி போன்ற முன்னாள் அமைச்சர்களுக்கு ஆதரவாக அறிக்கை விடுத்த ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும், தனது பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை என்பது சரோஜாவுக்கு பெரும் கவலையை தந்துள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications