கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. தங்கமணிக்கு எதிராக தாறுமாறாக வியூகம் அமைக்கும் செந்தில்பாலாஜி
நாமக்கல்: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், விஐபி தொகுதியான நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சிட்டிங் எம்எல்ஏ தங்கமணிக்கு எதிராக செந்தில் பாலாஜி தாறுமாறாக வியூகம் அமைத்து வருகிறார்.
தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுகவின் எஃகு கோட்டையாக திகழ்கிறது கொங்கு மண்டலம். கடந்த காலங்களில் கொங்கு மண்டலத்தில் திமுக தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளதால் இந்த முறை பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

நான்காவது முறையாக போட்டி
செந்தில் பாலாஜி மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த தேர்தலில் செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில், வரும் தேர்தலில் அவர் தெற்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விஐபி தொகுதியான நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்எல்ஏ தங்கமணி அறிவிக்கப்பட்டுள்ளார். தங்கமணி இந்த தொகுதியில் நான்காவது முறையாகப் போட்டியிடுகிறார்.
இவர் 2006 முதல் 2011 வரை திருச்செங்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும், குமாரபாளையம் தொகுதியில் 2011, 2016, 2021 என தொடர்ந்து 3 முறை குமாரபாளையம் தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார். 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகள் அமைச்சராக இருந்துள்ளார். அதிமுகவின் அமைப்புச் செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.
சிட்டிங் எம்எல்ஏ தங்கமணி
தேர்தல் வேலைகளில் தங்கமணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த முறை அவர் கடுமையான போட்டியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குமாரபாளையம் தொகுதியில் பிரதான பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசல். கடந்த தேர்தலில் ஆனங்கூர் ரயில்வே கேட் அருகே குறுக்கே பாலம் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தார். தங்கமணி வெற்றி பெற்றிருந்தாலும் திமுக ஆட்சி அமைத்ததால் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
அதேபோல, குமாரபாளையம் தொகுதியைப் பொருத்தவரை அதிகளவிலான சாயப்பட்டறைகள் உள்ளன. இதற்கு ரூ. 200 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலைய திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இடம் தேர்வு செய்வதிலேயே பல்வேறு பிரச்சனைகள் இருந்ததால், இறுதியாக பல்லக்காபாளையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனாலும், அந்த திட்டம் துவங்கப்படவில்லை. இதுமட்டுமல்லாமல் குமாரபாளையம் தாலுகா அலுவலகமும் காவேரி பாளையம் பகுதிக்கு மாற்றப்பட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.,
செந்தில் பாலாஜி வியூகம்
இந்நிலையில், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளராக உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, இந்த முறை எப்படியாவது தங்கமணியை வீழ்த்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். தங்கமணிக்கு எதிராக பணபலம் மிக்கவரும் அதேசமயத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பரிட்சயமானவருமான பள்ளிப்பாளையம் திமுக முன்னாள் ஒன்றியத் தலைவர் பாலுவை களத்தில் இறக்க செந்தில் பாலாஜி திட்டமிட்டுள்ளார்.
இதனால், குமாரபாளையம் தொகுதியில் கடும் போட்டி நிலவி வருகிறது. வெற்றிக் கனியைப் பறித்தாக வேண்டும் என்பதால் அதிமுக, திமுக இருதரப்பினரும் பணம் மற்றும் பரிசுகளை வாரி இறைக்கத் தயாராகி உள்ளனர். தவெக சார்பில் குமாரபாளையத்தில் போட்டியிட அக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலராக உள்ள விஜயலட்சுமியும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். தவெகவும் ஓட்டுகளைப் பிரிக்க வாய்ப்புள்ளதால் தங்கமணி இந்த முறை வெற்றி பெறுவது பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த முறை தங்கமணி கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும் என்கின்றனர் அரசியில் கட்சியினர்.












Click it and Unblock the Notifications