அதிமுகவின் முக்கியத் தலைகளை வளைத்த திமுக மாவட்டப் பொறுப்பாளர்... அனல் பறக்கும் நாமக்கல் அரசியல்..!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் என, பல முக்கிய பிரமுகர்களை திமுகவில் ஐக்கியமாக்கியுள்ளார் அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் ராஜேஷ் குமார்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை சேர்ந்த செந்தில்குமார் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று மாவட்ட கவுன்சிலராக உள்ளார். இவருக்கும் நாமக்கல் அதிமுக எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கருக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுகவில் இணைந்து அமைச்சர் தங்கமணிக்கும், எம்.எல்.ஏ. பாஸ்கருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் செந்தில்குமார்.
இதேபோல் புதுச்சத்திரம் ஒன்றிய கவுன்சிலர் துகில் கண்ணன், பஞ்சாயத்து தலைவர் ராமசாமி ஆகியோரும் செந்தில்குமாருடன் இணைந்து அதிமுகவை விட்டு வெளியேறி திமுகவில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்வை பொறுத்தவரை நாமக்கல் மாவட்ட அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் மீது மன வருத்தம் கொள்பவர்கள் அதனை அமைச்சர் தங்கமணியிடம் முறையிட்டு தீர்வு பெறுவார்கள். ஆனால் இவர்களோ பெரிய கும்பிடு ஒன்று போட்டுவிட்டு திமுகவுக்கு சென்றுவிட்டனர். இதனிடையே மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார் உட்பட அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் தக்கவைக்க அங்கு ஒரு டீம் முயற்சித்திருக்கிறது.
ஆனால், அதனை முறியடிக்கும் வகையில் நாமக்கல் மாவட்ட அதிமுக பிரமுகர்கள் மூவரையும் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்த மதுரைக்கே நேரடியாக அழைத்துச்சென்று அவர்களை உடன்பிறப்புகளாக மாற்றிவிட்டார் திமுக மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார். இதனிடையே கட்சியில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்ற ஸ்டாலின், நல்ல முறையில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுங்கள், உரிய நேரத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என நம்பிக்கை அளித்திருக்கிறார்.
கட்சியிலிருந்து விலகியவர்கள் குறித்து கூறும் அதிமுகவினர், திமுகவில் இவர்கள் இணைந்தது ஒரு நாள் செய்தி என்றும் அதைத் தவிர அவர்களுக்கு அங்கு பதவி கிடைக்க வாய்ப்பே இல்லை எனவும் கூறுகின்றனர். மேலும், காந்திச்செல்வன் மாவட்டச் செயலாளராக இருந்தபோது அவரால் ஒரங்கட்டப் பட்ட திமுக ஒன்றியச் செயலாளர்கள் அதிமுகவில் இணைந்து இன்று எம்.எல்.ஏ., சேர்மன் என உயர்ந்த பதவியில் இருப்பதாகவும் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.