உடைந்து தொங்கிய அரசு பேருந்து படிக்கட்டு.. நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் வெலவெலத்து பதறிய பயணிகள்
நாமக்கல்: அரசு பஸ்களில் பயணம் செய்யவே பயணிகள் பயப்படும் அளவுக்கு ஆங்காங்கே பகீர் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து விடுகின்றன.. பேருந்துகளின் மேல்பகுதிகளிலுள்ள ஓட்டைகளிலிருந்து மழை நீர் உள்ளே புகுந்து விடுவதும், துருப்பிடித்து இருக்கைகள் உடைந்துள்ளதும், பேருந்தின் பாகங்கள் கழண்டு சாலையில் விடுவதும் என பல சம்பவங்கள் நடந்து பொதுமக்களை அச்சமடைய வைத்துவிடுகின்றன. இப்போதும் நாமக்கல்லில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட பல இடங்களில் அரசு பஸ்கள் சேதமானதுடன், நாற்காலியுடன் சாலையில் விழுந்த நிகழ்வுகள் கடந்த வருடம் நடந்தது நினைவிருக்கலாம்.. அதிலும், கண்டக்டர் இருக்கையின் நெட்டு போல்டு திடீரென கழண்டுவிழுந்து, சீட்டில் உட்கார்ந்திருந்த கண்டக்டர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்ட வீடியோவை கண்டு பொதுமக்கள் பதறிப்போய்விட்டார்கள்.

பஸ்ஸின் படிக்கட்டு
பேருந்தின் பின்பக்க படிகட்டு உடைந்து நொறுங்கி, அது சாலையின் நடுவே விழுந்து, அதனை டிரைவரும், கண்டக்டரும் ஓடிச்சென்று எடுத்ததும், வேளாங்கண்ணியில் இருந்து நாகை நோக்கி சென்ற அரசு பஸ்சில் பின்புற கண்ணாடி இல்லாமல், திறந்த நிலையில் காற்று வாங்கியபடியே ஆபத்தில் இயக்கப்பட்டதும் என பல வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின.
அரசு பேருந்துகளின் அவல நிலை குறித்து எதிர்க்கட்சிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்தன. மேலும், போக்குவரத்து கழகங்களில் 6 வருடங்களை கடந்த பேருந்துகளை உடனடியாக மாற்ற வேண்டும், புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும், பேருந்துகளை பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும், போக்குவரத்து கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை அரசுக்கு விடுத்தன.
அரசு பேருந்துகளின் அவல நிலை
இதையடுத்து, தமிழக அரசு துரித நடவடிக்கையில் இறங்கியது.. மாநிலம் முழுவதிலுமுள்ள பேருந்துகளை உடனடியாக ஆய்வு செய்தது. வாகனங்களின் பிரேக், ஆக்சிலேட்டர், ஸ்டீயரிங், பஸ்சின் அடிப்பாகத்தின் தரம் குறித்தும், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்தும் போக்குவரத்து அதிகாரிகளின் ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
எனினும், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. அதாவது ஈரோட்டில் இருந்து கோவை கோட்டத்திற்கு K1 என்ற எண் கொண்ட அரசு பேருந்து குமாரபாளையம், பள்ளிபாளையம் வழியாக சென்று வருகிறது..
நாமக்கல் பள்ளிப்பாளையம்
இந்த பஸ், ஈரோட்டில் இருந்து வழக்கமான வழித்தடத்தில் நேற்றைய தினமும் சென்றது.. அப்போது பஸ்ஸில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்திருக்கிறார்கள்..
பள்ளிபாளையம் அருகே ஆவுத்திப்பாளையம் என்ற இடத்தில் பஸ் வந்தபோது அதன் பின்புற படிக்கட்டுகள் திடீரென உடைந்து, நடுரோட்டிலேயே விழுந்தது. இதைப்பார்த்து பதறிப் போன பஸ்ஸில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டார்கள்.. உடனடியாக அந்த பஸ் நிறுத்தப்பட்டது.. பிறகு பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டு, மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பஸ்ஸின் பின்பக்க படிக்கட்டு
பெரும்பாலும் இந்த பஸ் கூட்டமாக இருக்குமாம்.. இதனால், படிக்கட்டிலும் நிறைய பயணிகள் பயணம் செய்வது வாடிக்கையாகும்.. ஆனால், நேற்றைய தினம் 30 மட்டுமே பேருந்துக்குள் இருந்ததால், பேருந்தின் படிக்கட்டு பகுதியில் யாரும் நிற்கவில்லை.. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது..
எனினும், பயணிகள் பதற்றத்துடனேயே காணப்பட்டனர்.. அரசு பேருந்தின் படிக்கட்டு பொதுமக்கள் கண்முன்னாடியே உடைந்து விழுந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications