நாமக்கல் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு.. பள்ளிப்பாளையம் ஜோதிடர் குறித்த 'நேரம்'.. கம்பி எண்ணுகிறார்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்குவதற்காக ஜோதிடரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில், அரசு பள்ளி தலைமை ஆசிரியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்திருக்கிறார்கள். ஜோதிடர் ஒருவர் 1990-91-ம் ஆண்டில் 5-ம் வகுப்பு படித்த பள்ளிபாளையம் கண்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்துள்ளார். மாற்று சான்றிதழ் கேட்டபோது 5 ஆயிரம் கேட்டாராம் தலைமை ஆசிரியர். இப்போது அவர் கம்பி எண்ணி வருகிறார்.
நல்லவராக இருந்தால், நேர்மையுடன் இருந்தால் நிஜமாகவே தைரியமாக இருக்கலாம். ஆனால் நேர்மை தவறி செய்யும் சிறு தவறும் நம்மை மோசமாக பாதிக்கும். சில நேரங்களில் தவறே செய்யாமலும், நமக்கு சிலரால் சிக்கல் வரும். இந்த இரண்டுமே அரசு ஊழியர்களுக்கு அதிகம் நடக்கும்.

ஏனெனில் லஞ்சம் மூலம் சில அரசு ஊழியர்கள் வசதி வாய்ப்பை பெற்றாலும், ஒரு நாள் அவர்களுக்கே அது பெரிய சிக்கலாக மாறி சிறை செல்லும் அளவிற்கு கொண்டு செல்கிறது. சிலர் இதனை பழிவாங்கும் ஆயுதமாகவும் பயன்படுத்துவதும் நடக்கிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் லஞ்சம் வாங்கியதாக தலைமை ஆசிரியர் ஒருவர் கையும் களவுமாக கைதாகி உள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள களியனூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 45 வயதாகும் ஜெயவேல் ஜோதிடர் ஆவார். இவர் இ-சேவை மையம் அமைப்பதற்காக மேற்கொண்டு படிக்க முடிவு செய்தார். இவர் கடந்த 1990-91-ம் ஆண்டில் 5-ம் வகுப்பு வரை படித்து முடித்துள்ளார். இதையடுத்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கண்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் (50) என்பவரிடம் மாற்றுச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பத்துள்ளார்.
அதற்கு அவர் படித்து முடித்து 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ஆவணங்களை சரிபார்த்துவிட்டு பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்குவதாக தலைமை ஆசிரியர் விஜயகுமார் கூறினாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத ஜெயவேல், இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைபடி ரசாயன பவுடர் தடவிய 5 ஆயிரத்திற்கான ரூபாய் நோட்டுகளை நேற்று பள்ளியில் வைத்து ஜெயவேல் தலைமை ஆசிரியர் விஜயகுமாரிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி (பொறுப்பு) ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் தலைமையிலான போலீசார் தலைமை ஆசிரியர் விஜயகுமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுச்சான்றிதழ் வழங்க ஜோதிடரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பள்ளிப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications