பஸ் ஓடும்போதே.. உடைந்து விழுந்த படிக்கட்டு.. பதறிப்போன பயணிகள்.. நாமக்கல் அருகே அதிர்ச்சி
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே ஓடும் அரசுப் பேருந்தின் பின்புற படிக்கட்டு உடைந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டு மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு வரை செல்லும் கே1 அரசு பேருந்து தினந்தோறும் 7 முறை சென்று வருகிறது. இந்நிலையில் குமாரபாளையத்தில் இருந்து பள்ளிபாளையம் நோக்கி ஆவத்தி பாளையம் என்ற பகுதி அருகே இன்று காலை அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது.

காலை நேரம் என்பதால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரும் இலவச மகளிர் பேருந்து என்பதால், ஈரோட்டிற்கு பணிக்கு செல்லும் பெண்கள் என 40-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் பயணம் செய்தனர். பள்ளி நேரம் என்பதால் ஏராளமான மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் நின்றபடியே பயணம் செய்து கொண்டிருந்தனர்.
பேருந்தை ஓட்டுநர் ராமு என்பவர் ஓட்டி வந்தார். ஆவத்திப்பாளையம் பேருந்து நிறுத்த பகுதி அருகே பயணிகளை ஏற்றுவதற்காக அரசுப் பேருந்து நின்றது. அங்கிருந்த பயணிகளை ஏற்றுக்கொண்டு பேருந்து மெதுவாகச் சென்று ஒரு வேகத்தடையின் மேலே ஏறி இறங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக அரசுப் பேருந்தின் பின்புற படிக்கட்டு பகுதி கழன்று கீழே விழுந்தது.
இதனைக் கண்டு பேருந்தில் இருந்தவர்கள் கூச்சல் எழுப்பினர். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு, பார்த்தபோது பேருந்தின் பின்புறப் படிக்கட்டு பகுதி துருப்பிடித்து நிலையில் கீழே விழுந்தது தெரியவந்தது. இதனை அடுத்து தற்காலிகமாக கயிறு வைத்து பேருந்தின் படிக்கட்டு மற்றும் கதவு பகுதி கட்டப்பட்ட நிலையில் பேருந்து பவானி போக்குவரத்து பணிமனைக்கு கொண்டு செல்லபட்டது.
காலை நேரத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு சென்ற அரசு பேருந்து பின்புறம் படிக்கட்டு பகுதி கழன்று விழுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்தில் ஏறி சென்றனர். பேருந்தின் படிக்கட்டு பகுதியில் யாரும் நிற்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பேருந்தில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications