"இன்னும் பயிற்சி வேண்டுமோ.." சார்ஜ் போட்ட செல்போனை எடுக்க மறந்த திருடன்.. ‘மாட்டிக்கிட்டியே பங்கு!’
நாமக்கல்: நாமக்கல்லில் ஒரு ஹோட்டலில் திருடச் சென்ற திருடன், தனது செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு அதை மீண்டும் எடுக்காமலேயே சென்ற சம்பவத்தால், வலுவாகச் சிக்கியுள்ளான்.
தற்போது அந்த செல்போனை வைத்தே திருடனை பிடிக்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். செல்போன் சிக்கியதால் எளிதில் திருடனை பிடித்து விடலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
ஹோட்டலின் பூட்டை உடைத்து பக்காவாக ஸ்கெட்ச் போட்டு திருடிய திருடன், "மண்டையில் உள்ள கொண்டையை மறந்துட்டேனே.." என்பது போல செல்போனை விட்டுச் சென்று போலீஸாரிடம் தொக்காக சிக்கப் போகிறான்.
சென்னையில் மின்சார ரயிலில்.. தாவி சென்று செல்போன் பறிக்க முயன்ற திருடன்.. கால்களை இழந்து தவிப்பு
திருடனும், தடயமும்..
எவ்வளவு பெரிய திருடனாக இருந்தாலும், ஒரு தடயத்தையாவது விட்டுச் செல்வான் என்பதுதான் போலீஸார் மற்றும் உளவு அமைப்புகளின் தாரக மந்திரம். இது திருடனுக்கு மட்டுமல்ல.. கொலையாளிகளுக்கும் பொருந்தும். ஆனால் அந்த தடயத்தை கண்டுபிடித்து அதை வைத்து துப்பு துலக்குவதில்தான் சாதாரண போலீஸாருக்கும், திறமையான போலீஸாருக்கும் இடையேயான வித்தியாசம் உள்ளது. இதுபோன்ற எத்தனையோ வழக்குகளில், சாதாரண தடயம் கூட குற்றவாளிகளை காட்டிக் கொடுத்திருக்கிறது. குற்றவாளியின் ஒரு முடி கூட சிறந்த தடயம்தான். ஒரு முடியே குற்றவாளியை கண்டுபிடிக்க போலீஸாருக்கு போதுமானது என்ற நிலையில், நாமக்கல்லில் ஒரு திருடன் தனது செல்போனையே விட்டுச் சென்றிருக்கிறான்.
ஹோட்டலுக்குள் நுழைந்த 'பலே' திருடன்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரவேல். இவர் அதே பகுதியில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் வழக்கம்போல ஹோட்டலை மூடிவிட்டு சித்ரவேல் வீடு திரும்பியுள்ளார். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் அந்த ஹோட்டலின் பூட்டை உடைத்த திருடன் ஒருவன் உள்ளே புகுந்துள்ளான். பூட்டை உடைக்கும் சத்தம் கேட்கக்கூடாது என்பதற்காக தீக்குச்சிகள் மற்றும் நெருப்பை பயன்படுத்தி மிகவும் நேர்த்தியாக அவன் பூட்டை உடைத்துள்ளான்.
சார்ஜ் போட்ட திருடன்
ஹோட்டலுக்குள் நுழைந்த திருடன், இந்த நேரத்தில் யார் இங்கு வரப்போகிறார்கள் என்ற தைரியத்தில் மிகவும் சாவகாசமாக அங்குள்ள பொருட்களை நோட்டம் பார்த்துள்ளான். பின்னர், தனது செல்போனில் சார்ஜ் குறைவாக இருப்பதை கவனித்த திருடன், அந்த ஹோட்டலில் உள்ள ப்ளக் பாயிண்டிலேயே அதை சார்ஜ் போட்டுவிட்டு சாவகாசமாக திருடியுள்ளான். கல்லா பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை திருடிய அவன், ஹோட்டலுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் திருட பார்க்கிறான். ஆனால் முடியவில்லை. இந்நிலையில், ஹோட்டலுக்குள் ஏதோ சத்தம் வருவதை கேட்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர், அங்கு வந்துள்ளனர். இதனை தெரிந்துகொண்ட திருடன், அங்கிருந்த பின்வாசல் வழியாக தப்பியோடினான்.
சிக்கிய செல்போன்
இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து ஹோட்டல் உரிமையாளர் சித்ரவேலுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். இதன்பேரில் போலீஸாருடன் அங்கு வந்த சித்ரவேல் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது சார்ஜ் போட்ட செல்போனை திருடன் எடுக்க மறந்து தப்பியோடியதை போலீஸார் அறிந்தனர். பின்னர் அந்த செல்போனை கைப்பற்றிய போலீஸார் அதை வைத்து அந்த திருடனை தேடி வருகின்றனர். திருடன் பயன்படுத்திய செல்போன் உள்ளதால் எளிதாக அவனை பிடித்துவிடலாம் என போலீஸார் தெரிவித்தனர்.