வாகன சோதனை செய்த போலீஸையே.. சிக்க வைத்து சம்பவம் செய்த நாமக்கல்.. என்ன நடந்தது?
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருசெங்கோட்டில் வாகனச் சோதனையின் போது பைக் ஓட்டிகளிடம் எஸ்ஐ உள்பட இரண்டு போலீசார் வசூல் வேட்டை நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து எஸ்.ஐ உள்ளிட்ட இரண்டு போலீசாரையும் சஸ்பெண்ட் செய்து சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதுமே போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்ட எஸ்.பி ராஜேஸ்கண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதுமே போக்குவரத்து விதிகளை மீறுவோரின் வாகனங்களுக்கு சோதனையில் அபராதம் விதிக்கப்படுகிறது.

இதற்காக போக்குவரத்து போலீசார் மட்டுமின்றி, சட்டம்- ஒழுங்கு மற்றும் போக்குவரத்துப் பிரிவு போலீஸாரும், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் வாகனச் சோதனையில் ஈடுபடுகிறார்கள். அப்போது ஓட்டுர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால், தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டினால், ஒரே வாகனத்தில் 3 பேர் வந்தால், மது போதையில் வாகனம் ஓட்டினால், கார்களில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டினால், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால், ஆட்டோக்களில் அதிக நபர்களை ஏற்றினால், கனரக வாகனங்களில் முறையான ஆவணங்கள் இல்லாவிட்டால் இ-செல்லான் மூலம் வழக்கு பதிவுசெய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இப்படி, தினமும் நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனில் இருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
இந்த நிலையில், திருச்செங்கோட்டில் பணியாற்றும் ஒரு சில போலீஸார், விதிமுறைகளை மீறி இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களிடம் வாகன சோதனை என்ற பெயரில வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
அண்மையில் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகேஇரண்டு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் அப்போது, அந்த வழியாக வரும் இரு சக்கர வாகனங்களைத் தடுத்து நிறுத்திய அவர்கள், அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.பின்னர் வாகன ஓட்டுநர்களிடம் பணம் கொடுத்துவிட்டுச் செல்லும்படி போலீஸார் கூறுகிறார்கள். வாகன ஓட்டுநர்களும் தங்களிடம் இருக்கும் பணத்தை அவர்களிடம் திணித்துவிட்டு, அங்கிருந்து வாகனங்களைக் கிளப்பிக்கொண்டு வேகமாக சென்றுள்ளார்கள்.
இந்நிலையில் போலீசின் வாகன சோதனையால் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு வாகன ஓட்டுநர் இதை மறைந்திருந்து போலீஸுக்குத் தெரியாமல் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிட்டார்.அந்த வீடியோ வேகமாக பரவியதால் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரு கட்டத்தில் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றது, இதையடுத்து விசாரணைக்கும் உத்தரவிட்டனர்.
விசாரணையில், வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்கியது, திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன், போலீஸ் ஏட்டு குணசேகரன் ஆகிய இரண்டு பேர்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது
இந்த நிலையில், போலீஸ் ஏட்டு குணசேகரனை நாமக்கல் மாவட்ட எஸ்.பி ராஜேஸ்கண்ணன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். இதேபோல், உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜனை சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை நடத்திய இரண்டு போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications