திருமாவளவனை விமர்சித்து பதிவு- விஷ்வ ஹிந்து பரிஷத் மாஜி நிர்வாகி சபரிநாதனை அள்ளிய போலீஸ்!
நாமக்கல்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.யை சமூக வலைதளங்களில் இழிவாக விமர்சித்து பதிவிட்டதாக இந்துத்துவா அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் நிர்வாகி சபரிநாதனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து இயக்கங்களை மிக கடுமையாக விமர்சித்தும், போராட்டங்களை முன்னெடுத்தும் வருகிறார் திருமாவளவன். அண்மையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, மனுதர்மம் குறித்து பேசியிருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையானது. அப்போது திருமாவளவன், வேல்முருகன், சீமான் உள்ளிட்டோர் ஆ.ராசாவை ஆதரித்தனர்.

பின்னர் திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றி மாறன், ராஜராஜ சோழன் குறித்து பேசியது கடும் சர்ச்சையானது. அப்போதும் மனுஸ்மிருதி தொடர்பாக திருமாவளவன் கடுமையாக விமர்சித்தார். அத்துடன் இந்து சமய அறநிலையத்துறையை சைவ அறநிலையத்துறை, வைணவ அறநிலையத்துறை என பிரிக்கவும் திருமாவளவன் வலியுறுத்தினார். இதற்கு பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தப் பின்னணியில் இந்துத்துவா இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் திருமாவளவனை கடுமையாக விமர்சித்திருந்தனர். இதில், விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் முன்னாள் சேலம் கோட்ட நிர்வாகி சபரிநாதன் என்பவர் இழிவாக திருமாவளவனை விமர்சித்திருந்தார். அவரது இந்த ஃபேஸ்புக் பதிவு குறித்து போலீசில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய நாமக்கல் பள்ளிப்பாளையம் போலீசார் சபரிநாதனை கைது செய்தனர். முன்னெசரிக்கை நடவடிக்கை, அவதூறு பரப்புதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சபரிநாதன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பின்னர் பள்ளிப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சபரிநாதன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications