24 மணி நேரத்தில்.. அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு.. சர்ச்சில் சரமாரி தாக்குதல்.. ஒருவர் பலி!
நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சர்ச் ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் பலியானார்.
மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு தெற்கு கலிபோர்னியா பகுதியில் இருக்கும் எல் டோரோ சாலையில் இருக்கும் சர்ச் ஒன்றில் நடத்தப்பட்டு உள்ளது. உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கு இருந்த மக்கள் மீது சரமாரியாக சுட்டுள்ளார்.
உள்ளே வழிபாடு நடத்திக்கொண்டு இருந்த மக்கள் மீது அந்த நபர் சரமாரியாக தாக்குதல் நடத்தினார்.
இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அவரிடம் நயமாக பேசிய போலீசார், துப்பாக்கியை கீழே போட வைத்து அவரை சரண் அடைய வைத்தனர்.
இந்த தாக்குதலுக்கு மத வெறி அல்லது இன வெறி காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் தனியாக துப்பாக்கி சூடு நடத்தினாரா அல்லது அவருக்கு வேறு யாரும் உதவியாக இருந்தனரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்றுதான் அமெரிக்காவின் பஃப்பல்லோ நகரத்தில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு நடந்தது.
நேற்று 18 வயது இளைஞர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 10 பேர் பலியானார்கள் . இவரின் பெயர் பேய்டன் ஜென்ட்ரான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இன்று மீண்டும் அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.