அடுத்தடுத்த டிவிட்கள்.. உளறி கொட்டிய எலான் மஸ்க்.. நொடிப்பொழுதில் ரூ. 1 லட்சம் கோடி காலியானது!
தொடர்ந்து சர்ச்சையான டிவிட்களை பதிவிட்டு வந்த காரணத்தால் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓவுமான எலான் மஸ்க் 23 ஆயிரம் கோடி ரூபாயை இழந்து இருக்கிறார்.
நியூயார்க்: தொடர்ந்து சர்ச்சையான டிவிட்களை பதிவிட்டு வந்த காரணத்தால் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓவுமான எலான் மஸ்க் 23 ஆயிரம் கோடி ரூபாயை இழந்து இருக்கிறார். அவரின் டெஸ்லா நிறுவனம் ஒரு லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களை நிறுவிய எலான் மஸ்க் மிகவும் வித்தியாசமான நபர். செவ்வாய் கிரகத்திற்கு தனது டெஸ்லா காரை அனுப்பியது தொடங்கி பொது நிகழ்ச்சியில் கஞ்சா அடித்து சர்ச்சையில் சிக்கியது வரை எலான் மஸ்க் செய்யும் எல்லா விஷயங்களும் வைரலாகும்.
டிவிட்டரில் தீவிரமாக செயல்பட்டு வரும் எலான் மஸ்க் கொரோனா வைரஸ் குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு குறித்தும் தீவிரமாக பேசி வந்தார். அமெரிக்க அரசின் ஊரடங்கு கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
டிவிட்க்கள்
இந்த நிலையில் எலான் மஸ்க் கடந்த இரண்டு தினங்களாக டிவிட்டரில் மோசமாக டிவிட்டுகளை செய்து வந்தார். அமெரிக்க தேசிய கீதத்தின் வரிகளை கிண்டல் செய்யும் வகையில் டிவிட் செய்து இருந்தார். அதேபோல் ஷேர் மார்க்கெட்டில் டெஸ்லாவின் மதிப்பு மிக வேகமாக உயர்ந்து கொண்டே செல்கிறது என்று கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார். மார்க்கெட்டில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றாலும் கூட அந்த டிவிட்டை அவர் வேண்டும் என்றே செய்து இருந்தார்.
குழப்பம்
அதேபோல் இன்னொரு பக்கம் என் காதலி என்னுடன் சண்டை போட்டுவிட்டார். நான் என்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்க போகிறேன். என்னுடைய சொந்த வீட்டை கூட விற்க போகிறேன். நான் இருந்த பழைய வீட்டை தவிர அனைத்து வீட்டையும் விற்க போகிறேன் என்று எலான் மஸ்க் டிவிட் செய்து இருந்தார். வரிசையாக போதையில் இருப்பது போல எலான் மஸ்க் சம்பந்தமே இல்லாமல் நிறைய டிவிட்களை செய்தார்.
எதிர்ப்பு
இதில் அவர் ஷேர் மார்க்கெட் குறித்து செய்த டிவிட் பெரிய பிரச்ச்சனை ஆனது. பலர் இது குறித்து எலான் மஸ்க்கிடம் விளக்கம் கேட்க தொடங்கினார்கள். மற்ற நிறுவனங்களும் எலான் மஸ்க்கின் டிவிட்டிற்கு விளக்கம் கேட்க தொடங்கியது. அதேபோல் அமெரிக்காவின் ஷேர் மார்க்கெட்டை கட்டுப்படுத்தும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் எலான் மஸ்க்கிடம் விளக்கம் கேட்டது.
பணம் போனது
இந்த பிரச்சனையை தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படலாம், அதன் மதிப்பு சரியலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் மக்கள் பலர் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து தங்கள் முதலீடுகளை எடுத்தனர். இதன் காரணமாக டெஸ்லாவின் சிஇஓ எலான் மஸ்க் 23 ஆயிரம் கோடி ரூபாயை இழந்து இருக்கிறார். அவரின் டெஸ்லா நிறுவனம் ஒரு லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது.
பெரிய சரிவு
அந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பில் 9% வரை சரிந்துள்ளது. சம்பந்தமே இல்லாமல் எலான் மஸ்க் செய்த டிவிட்க்கள் அவருக்கு இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னொரு பக்கம் எலான் மஸ்க் மீது டெஸ்லா நிறுவனத்தின் போர்ட் மெம்பர்கள் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். டெஸ்லாவின் சிஇஏ பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் நீக்கப்படலாம் என்கிறார்கள். எலான் மஸ்க் மீது அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறுகிறார்கள்.
இதற்கு முன்பு
இதற்கு முன் இதேபோல் எலான் மஸ்க் டிவிட் செய்தார். டெஸ்லா நிறுவனத்தை ஷேர் மார்க்கெட்டில் இருந்து நீக்கப்போவதாக பொய்யாக டிவிட் செய்தார். இதனால் அப்போதே டெஸ்லா மீது அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் 20 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது. அப்போதே எலான் மஸ்க் டிவிட்களை
வழக்கறிஞர் ஒருவர் பார்வையிட்ட பின்பே டிவிட் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.